‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு தனது கால் காயத்துடன், நொண்டியபடியே நடந்து வந்தார் தனுஷ். 7 மணி பிரஸ் மீட், சற்றே தாமதமாக எட்டே காலுக்குத்தான் துவங்கியது. நாகரிகமாக தனது பேச்சின் துவக்கத்திலேயே இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார் தனுஷ்.
தன்னை எல்லோரும் ‘ஒல்லிக்குச்சி’ என்று கிண்டல் செய்வதெல்லாம் இப்போது நின்றுபோய்விட்டதையும், அதற்கான காரணத்தையும் நகைச்சுவையாக இந்த விழாவில் பேசினார் தனுஷ்.
“இதுக்கு முன்னாடி தமிழ்நாட்டில் நான்தான் ஒல்லியான ஆளாக இருந்தேன். அனிருத் வந்ததிற்கு பிறகு என்னை யாரும் ஒல்லின்னு சொல்வதே இல்லை. முன்பு ‘ஒல்லிபிச்சான் நடிகர்’ என்று எழுதுவார்கள், அது சமீபகாலமாக வருவதில்லை. அதற்கு காரணம் என்னவென்று யோசித்தபோது அனிருத்துதான் காரணம் என்று புரிந்தது. இதுக்காகவே அவருக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன்.. “ என்றார் தனுஷ்.
அவர் மேலும் பேசுகையில், “இந்தப் படத்திற்கு இந்தளவிற்கு எதிர்பார்ப்பு கிடைத்ததிற்கு காரணம் அனிருத்தின் பாடல்கள்தான். ஒரு காலத்தில் அனிருத்திற்கு உறுதுணையாக இருந்தேன். இப்போது எனக்கு உறுதுணையாக அனிருத் இருக்கிறார். இவரோட வளர்ச்சி என்னை பெருமையடைய வைக்கிறது.
4 பாடங்களின் பாடல்கள் மூலமாக இவ்வளவு பெரிய உயரத்தினை தொட்டு இருப்பது பெரிய விஷயம். கண்டிப்பாக கடவுளின் ஆசிர்வாதம் அனிருத்திற்கு இருக்கிறது. 4 படங்கள், 20 பாடல்கள் அனைத்துமே ஹிட் என்பது சாதனை என்றே சொல்லலாம். அவர் இதனை தொடர வேண்டும்..” என்றார்.