full screen background image

“அந்தகன் ஒரு வெயிட்டான கதை” – நடிகர் பிரஷாந்த் பெருமிதம்!

“அந்தகன் ஒரு வெயிட்டான கதை” – நடிகர் பிரஷாந்த் பெருமிதம்!

நடிகர் தியாகராஜனின் மகன் என்ற அடையாளத்துடன் ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரசாந்த்.

அரும்பு மீசையுடன் பாலிவுட் ஹீரோவை போன்ற தோற்றத்தில் வலம் வந்து ரசிகர்களை கவர்ந்து, மீண்டும் மீசை, தாடியுடன் ஒரு ஆண் மகனுக்கே உண்டான அழகுடன் வலம் வந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். குறிப்பாக. ’ஆணழகன்’ என்ற தலைப்புக்கு உண்மையிலேயே பொருத்தமானவர் பிரசாந்த் என்றால் மிகையல்ல. இவர் மீசை தாடியுடன் இருந்தாலும் அழகு, முழுக்க முழுக்க க்ளீன் ஷேவ் லுக்குடன் தோன்றினாலும் அழகு என்று சொல்லத்தக்க வகையில் இருப்பவர் இவர் மட்டுமே.

பிரசாந்தை நகர்ப்புற சாக்லேட் பாய் இளைஞன் என்ற கதாபாத்திரங்களில் மட்டும் சுருக்கிவிட முடியாது. கிராமத்துப் படம், காதல் படம், ஆக்‌ஷன் படம், கதையம்சமுள்ள படங்கள் என பல வகையான படங்களில் நடித்து வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டு இந்த திரையுலகில் உழைத்துக் கொண்டேதான் இருக்கிறார்.

இதோ இப்போது ‘அந்தாதுன்’ இந்திப் படத்தின் ரீமேட் ஆன அந்தகன்-னில் நடித்து முடித்து ரிலீஸ் பிசியில் இருக்கிறார்.

இந்நிலையில் இந்த அந்தகன் அனுபவம் குறித்து பிரஷாந்திடம் பேசிக் கொண்டிருந்தபோது ”நாளை ஆகஸ்ட் 9-ம் தேதி ‘அந்தகன்’ படம் ரிலீசாகப் போகுது. தமிழகத்தில், 400-க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். இதில் என்னுடன் சிம்ரன், பிரியா ஆனந்த், நவரச நாயகன் கார்த்தி, சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

‘அந்தாதுன்’ படத்துக்கும், எங்களுடைய ‘அந்தகன்’ படத்துக்கும் நிறைய வித்தியாசங்களை எதிர்பார்க்கலாம். இது, ‘ரீமேக்’ படம் அல்ல. ‘ரீ மேட்’ படம். அப்பாவின் இயக்கம், பிரமிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். ரசிகர்களுக்கு, இப்படம் நிச்சயம் பிடிக்கும்.

கொஞ்சம் விரிவாக சொல்வதானால் இந்தப் படத்தில் ஒவ்வொரு சீனிலும் சஸ்பென்ஸ் இருக்கும். பிளாக் காமெடி இருக்கும். அதனால் சிரித்துக் கொண்டே இருக்கும்போது திடீர் ஆச்சரியங்கள் வரும்.

படத்தில், நான் பார்வையற்றவராக நடித்தது பெரும் சவாலாக இருந்தது. குறிப்பா என்னுடைய திறமையை வெளிப்படுத்தற மாதிரி பல படங்கள்ல நடிச்சிருந்தாலும். பியானோ இசைக் கலைஞனா நடித்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. எனக்கு நிஜமாகவே பியானோ இசைக்கத் தெரியும் என்பதால், என் திறமையை வெளிப்படுத்த இந்தப் படத்தை பயன்படுத்திக் கொண்டேன்.

அது மட்டுமில்லாமல், தமிழுக்கு மையக் கதையைக் கெடுத்திடாத வகையில், அப்பா சின்னச் சின்ன மாற்றங்கள் செய்திருக்கிறார். தமிழுக்கு சரியாக இருக்காதுன்னு நினைச்ச சில காட்சிகளை மாத்தியிருக்கிரார். கதைக்கு இன்னும் அழுத்தம் கொடுக்கும்விதமாவும் கதையை வேகமாக நகர்த்தும் பாணியிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் உண்டு.

குறிப்பாக சொல்வதானால் எனக்கும் சமுத்திரக்கனி அண்ணாவுக்கும் ஒரு பைட் எடுத்தார்கள். இதற்காக ஐந்து நாள் ஷூட் நடத்தினோம். அது மிக மிரட்டலான காட்சியாக அமைந்துள்ளது. இதற்காக மாடியில் இருந்து நிஜமாகவே குதித்ததெல்லாம் தனிக் கதை. இந்த சணடைக் காட்சி தமிழுக்காக சேர்த்த விஷயம்.

மேலும் வெயிட்டான கதை என்பதாலேயே கார்த்திக் அண்ணா, சிம்ரன், சமுத்திரக்கனி அண்ணா. ஊர்வசி, லீலா சாம்சன், செம்மலர், வனிதா விஜயகுமார், யோகிபாபுன்னு நிறைய பேர் கமிட் ஆகி உள்ளார்கள். ஒவ்வொருவரும் நடிப்பில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள். இது எனக்கு புதிய அனுபவம்.

பிஸியாக இந்திப் படங்கள் பண்ணி கொண்டிருக்கும் ரவி யாதவைக் கூட்டிட்டு வந்து ஒளிப்பதிவு பண்ண வைத்திருக்கிறார் அப்பா. பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனம் ஒவ்வொன்றும் கவனிக்க வைக்கும். கலை இயக்குநர் செந்தில் ராகவன் உள்பட எல்ல டெக்னீஷியன்களும் தங்களின் சிறந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

முன்னொரு காலத்தில் இளசுகளின் ஆதர்ச ஹீரோவாக இருந்த கார்த்திக் சாருக்கு தனி முக்கியத்துவம் இருக்கிறது இந்தப் படத்தில்.! 1980-ம் வருட கார்த்திக்கை அவர் வரும் ஒவ்வொரு சீனிலும் பார்க்கலாம். அவர் கேரக்டர் எல்லாருக்கும் பிடிக்கும்படி இருக்கும். கதையை கேட்டு, இனவால்வ் ஆகி தன் பாணியில நடித்து அசத்தி இருக்கிறார் கார்த்திக் அண்ணன்.

அப்புறம் தமிழ் சினிமாவில் எந்த ஜோடிகளும் நிகழ்த்திக்காட்டாத காதல், மோதல், ஆக்சன் என பல ஜானர்களில் நடித்து கலக்கியுள்ள சிம்ரனும் நானும் சேர்ந்து ஆறு படங்கள்ல ஜோடியா நடித்து எல்லோரையும் கவர்ந்து உள்ளோம். அந்தக் கெமிஸ்ட்ரி வேற மாதிரி இருக்கும்.

இந்தப் படத்தில் சஸ்பென்ஸ் நிறைந்த கேரக்டரில் சிம்ரன் வருகிறார். கிடைச்ச எல்லா ரோலையும் அவர் தன் பெர்ஃபார்மன்ஸால் மிரட்டுவது வாடிக்கை .அந்த ஸ்டைலில் அந்த கேரக்டருக்குச் சரியான நடிப்பை கொடுத்து அசத்தி இருக்கிறார். நிச்சயமா அவர் நடிப்புக்கு விருது கிடைக்கும் என்றே நம்புகிறேன்.

வனிதா விஜய்குமார் கேரக்டரைப் பார்க்கும் ஒவ்வொருவரும் கை தட்டி ரசிக்கப் போவது நிஜம். அதுபோல நிஜமான தமிழ் பெண்ணான பிரியா ஆனந்த் இனி கால்ஷீட் கொடுப்பதில் பிசியாகி விடுவார். அந்த அளவுக்கு எல்லாருக்கும் சமமாக, சவாலான வாய்ப்பு வழங்கி இருக்கிறார் அப்பாவு தியாகராஜன் சார்.

இனி வெள்ளித்திரையில் எனக்கு இடைவெளி இருக்காது. இதுவரை ஒவ்வொரு கதைக்கும் என்னைத் தயார்படுத்திக் கொள்ள அந்த கால அவகாசம் தேவையாக இருந்தது. இனி அது இருக்காது. தொடர்ந்து நடிக்கப் போகிறேன்.

இப்போது தினமும் நிறைய இயக்குநர்கள் வந்து கதை சொல்வதும் தயாரிப்பாளர்கள் வந்து போவதும் அதிகரித்துவிட்டது. இந்த ‘அந்தகனுக்கு’ அடுத்ததாக விஜயுடன் நடித்த கோட் ரிலீஸ் ஆகப் போகிறது. நெக்ஸ்ட் அமிதாப்பச்சன் சாருடன் சேர்ந்து ஒரு படம் பண்றேன். அதுவும் பெரிய பட்ஜெட் படம். நான்கு மொழிகளில் உருவாகிறது.

இது தவிர விஜய் ஆண்டனி நடித்த ‘நான்’ படத்தை இந்தியில் ‘ரீ சார்ஜ்’ என்னும் டைட்டிலில் ரீமேக் பண்ணுகிறோம். அது பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வரும்” என்று உற்சாகமாகச் சொன்னார் ஜூனியர் மம்பட்டியான்.

Our Score