விஷால் பிலிம் பேக்டரியின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் இரும்புத் திரை. இத்திரைப்படத்தில் விஷாலும், சமந்தாலும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். பி.எஸ்.மித்ரன் இப்படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.
இந்தப் படம் வரும் மே 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி பத்திரிகையாளர்களிடத்தில் பேசினார் படத்தின் நாயகியான சமந்தா.
அவர் பேசும்போது, “இந்த ‘இரும்புத்திரை’ படத்தின் கதையை கேட்கும்போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம் வாழும் இந்த சமூகத்தில் நமக்கு தெரியாமல் இவ்வளவு பிரச்சனைகள் இன்டர்நெட் மீடியம் மூலமாக நம்மை சுற்றி நடக்கிறதா என்று பதைபதைக்க வைத்தது.
படத்தின் கதையைக் கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய கைப்பேசியை தொடவே எனக்கு மிகவும் பயமாக இருந்தது. இந்த படம் இன்டர்நெட் மூலமாக நமக்கு என்னவெல்லாம் பிரச்சனைகள் உள்ளது.. அது நமக்கு எப்படியெல்லாம் தீங்கு விளைவிக்கும் என்று மிக தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டும். நமது பிரைவசி எப்படி வெளியே கசிகிறது என்பதை பற்றியும் இப்படம் பேசும்.
எனக்கு புதுமுக இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றுவதில் சிறிது தயக்கம்தான். ஆனால் இயக்குநர் மித்ரன் ஒருபோதும் என்னை அப்படி பீல் பண்ண வைத்தில்லை. அவர் கதை சொல்லும்போதே நாம் ஒரு திறமையான இயக்குநரோடு இணைந்து பணியாற்ற போகிறோம் என்று தெரிய வைத்தார். சொன்னது போலவே படத்தையும் சிறப்பாகவே இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் வருவது போன்ற சம்பவங்கள் எதுவும் என்னுடைய வாழ்க்கையில் நடந்தது இல்லை. அதற்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால், என்னுடைய நட்பு வட்டத்தில் உள்ள சிலர் இன்டர்நெட் மூலம் நடக்கும் மோசடிகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
உங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. 1 கோடி ரூபாய் வென்றுள்ளீர்கள் என்று வரும் விளம்பரங்களுக்கு பதிலளித்து, பல லட்சங்கள் கொடுத்து ஏமாந்து உள்ளார்கள். இன்று ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் அனைத்தும் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிவிட்டது. அவற்றுக்கு நாம் அடிக்ட் ஆகிறோம் என்பது தவறு. அதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.
இந்த ‘இரும்புத்திரை’ திரைப்படம் ரசிகர்களுக்கு சமூக வலைத்தளங்கலால் ஏற்படும் பிரச்சனை பற்றியும். அதை நாம் எப்படி சரியாக பயன்படுத்தலாம் என்பது பற்றியும் எடுத்து கூறி நம்மிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இருக்கும்.
விஷால் மற்றும் அர்ஜுன் சார் இருவருமே அவரவர் ஸ்டைலில் ஹாட்டஸ்ட் ஹீரோக்கள்தான். அவர்களோடு இப்படத்தில் நடித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி…” என்றார் சமந்தா அக்கினேனி.