தமிழ் நடிகையான ரேவதி மீண்டும் ஹிந்தி படத்தை இயக்குகிறார். ‘சலாம் வெங்கி’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.
ரேவதி, ஏற்கெனவே ’மித்ரு மை ஃபிரெண்ட்’, ’பிர் மிலேங்கே’, ’கேரளா கஃபே’ படங்களை இயக்கியுள்ளார். இப்போது நான்காவது படமாக இந்த ’சலாம் வெங்கி’ என்ற இந்திப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தை பிளிவ் புரொடக்ஷன்ஸ் மற்றும் டேக் 23 ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் சுராஜ் சிங், ஷ்ரத்தா அகர்வால், வர்ஷா குக்ரேஜா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை கஜோல் நடிக்கிறார். நம்ப முடியாத ஒரு உண்மைக் கதையை மையக் கருவாகக் கொண்டு இந்தப் படம் உருவாகப் போவதாக இயக்குநர் ரேவதி தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. இந்தத் தகவலை நடிகை கஜோல் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில், “நாங்கள் இன்று சொல்லப்பட வேண்டிய கதை, தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை, கொண்டாட வேண்டிய வாழ்க்கை ஆகியவற்றைக் கொண்ட பயணத்தை தொடங்கி இருக்கிறோம். ’சலாம் வெங்கி’யின் நம்ப முடியாத உண்மைக் கதையை உங்களிடம் பகிரக் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் ரேவதி கூறும்போது, “இந்தப் படத்தில் சுஜாதா என்ற தாயின் பயணம் இருக்கிறது. என் மனதுக்கு மிகவும் நெருக்கமான பயணம் அது. இந்த கேரக்டருக்கு கஜோல்தான் என்று முதலிலேயே முடிவு செய்துவிட்டோம்.
அவரது அழகான கண்களும், அழகானப் புன்னகையும் எதையும் சாத்தியம் என நம்ப வைக்கும் ஆற்றல் கொண்டவை. அவருடன் இணைந்து பணிபுரிவதில் ஆவலாக இருக்கிறேன்…” என்று தெரிவித்துள்ளார்.