‘இமைக்கா நொடிகள்’ படத்தில், ஹீரோவான அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை ராஷி கண்ணா நடிக்க இருக்கிறார்.
மிகப் பெரிய பட்ஜெட். சிறந்த நடிகர் – நடிகைகள்.. தொழில் நுட்ப கலைஞர்கள். இந்த மூன்று சிறப்பம்சங்களையும் வலுவாக உள்ளடக்கி உருவாகி வருகிறது கேமியோ பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சி.ஜெ.ஜெயக்குமார் தயாரித்து, ஆர்.அஜய் ஞானமுத்து இயக்கவிருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படம்.
படம் பற்றிப் பேசிய தயாரிப்பாளர் சி.ஜெ.ஜெயக்குமார், “எங்கள் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை நாங்கள் மிகுந்த கவனத்துடன் உருவாக்கி வருகிறோம். முக்கியமாக எங்கள் படத்தின் அஸ்திவாரமாக செயல்படுவது கதைக் களம்தான். அந்த கதைக் களத்தை தாங்கி நிற்கும் வலுவான தூண்களாக ஹீரோ அதர்வா, இயக்குநர் அஜய் ஞானமுத்து, ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளர் ‘ஹிப் ஹாப்’ தமிழா, இவை அனைத்திற்கும் மேலாக நயன்தாராவும் இருப்பது எங்கள் படத்திற்கு கூடுதல் பலம்.
சிறந்த நடிகர் – நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பான விளம்பரங்கள் மூலம் எங்கள் படத்தை மேலும் மெருகேற்ற முடிவு செய்திருக்கிறோம். அந்த வகையில் நயன்தாராவின் வருகை எங்கள் படத்தின் வேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஹாலிவுட் திரைப்படங்களை போல இந்த படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. இரு வேறு முனைப்புகளில் சொல்லப்படும் இந்த கதையில், கதாபாத்திரங்களின் பங்களிப்பும், உணர்த்தலும் மிக, மிக அவசியம். அதுதான் இந்தப் படத்தின் சிறப்பு.
இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஒரு புதுமுகம் நடித்தால் நன்றாக இருக்கும் என்றெண்ணி, தற்போது தெலுங்கு திரையுலகின் நம்பகமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஷி கண்ணாவை தேர்வு செய்திருக்கிறோம். நிச்சயமாக அவரின் இந்த வருகை படத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும்.
தற்போது எங்கள் படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்காக இந்தியாவின் முன்னணி நடிகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதன் மூலம் தேசிய அளவில் எங்கள் திரைப்படம் பேசப்படும்.
ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளர் ‘ஹிப் ஹாப்’ தமிழா, படத் தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன், கலை இயக்குநர் செல்வக்குமார் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயன் என்று சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றுவது, எங்கள் படத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளது.
வரும் அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பை துவங்க இருக்கிறோம். ‘இமைக்கா நொடிகள்’ படத்தை பார்க்க வரும் ஒவ்வொருவரும் தங்களின் இமைகளை ஒரு நொடிகூட மூட மாட்டார்கள்….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.