மலையாளத்தில் வெளியான ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’, தமிழில் வெளியான ‘இருவர்’, போன்ற படங்களுக்கு பிறகு.. மோகன்லாலுடன் கவுதமி இணைந்து நடித்திருக்கும் படம் ‘நமது.’ இத்திரைப்படம் நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது…
இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை நடைபெற்றது. இதில் நடிகை கவுதமி கலந்து கொண்டு பேசினார்.
“ஒரு நாள் இயக்குநர் சந்திர சேகர் ஏலட்டி என்னை தொடர்பு கொண்டு ‘கதை சொல்ல வேண்டும்’ என்று கேட்டார். அந்த இயக்குநரை பற்றி ஆந்திரா முழுவதுமே தெரியும். அவர் இயக்கிய ‘அய்த்தே’ என்ற படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் தேசிய விருதையும் வாங்கி கொடுத்த படம். அவர் மீது எல்லோருக்கும் ஒரு மதிப்பு இருப்பதால் நானும் கதை கேட்க சம்மதித்தேன்.
அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்தது. நான் எது மாதிரியான கதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேனோ.. அது மாதிரியான கதாப்பாத்திரத்தை இயக்குனர் சொன்னதால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
‘பாபநாசம்’ படத்தை பார்த்துதான் என்னை நடிக்க அழைக்கிறீர்களா என்று இயக்குநரிடம் கேட்டேன்.. நான் ‘பாபநாசம்’ படம் பார்க்கவில்லை இந்த கதையை இரண்டு வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்திருந்தேன். இந்த கதாப்பாத்திரத்தில் நீங்கள் நடித்தால்தான் நன்றாக இருக்கும்…’ என்று இயக்குநர் சொன்னது எனக்கு பெருமையாக இருந்தது.
இதேபோல் மோகன்லாலிடம் இந்தக் கதை பற்றி இயக்குநர் சொல்ல முயலும்போது ‘அடுத்த படம் செய்ய ஒரு வருடம் ஆகுமே’ என்று கூறிய மோகன்லால், முழு கதையையும் கேட்ட பிறகு உடனேயே இதில் நடிக்க சம்மதித்தார்.
படப்பிடிப்பு நடைபெற்றபோது. யாருக்கும் சலிப்பு வராத மாதிரி இயக்குனர் படப்பிடிப்பை நடத்தியதால் படம் நல்ல படமாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இப்போது படமே வெளியாக போகிறது.
நன்கு தலைமுறைகளை சேர்ந்தவர்களும் ஒன்றாக அமர்ந்து பார்க்கக் கூடிய வன்முறை இல்லாத படம் இது. இன்றைய ‘நமது’ தலைமுறையினர் பார்க்க வேண்டிய படமாகவும் இது இருக்கும். நான்கு கதாப்பாத்திரங்களை சுற்றி நடக்கும் கதை. நால்வரும் சந்திக்கும்போது. படத்தின் கிளைமாக்ஸ் புது மாதிரியாக இருக்கும். படத்தில் ஊர்வசி காமெடியில் கலக்கி இருக்கிறார்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் ரஜினி கோரப்பட்டி, இயக்குநர் சந்திரசேகர் ஏலட்டி இருவரும் இந்த படத்தை ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வெளியிடுவது பெரிய விஷயம். நான் தமிழ், தெலுங்கு இரண்டிலும் எனது சொந்த குரலில் பேசியிருக்கிறேன். விரைவில் மலையாளத்தில் பேச முயற்சி செய்வேன்.
நானும் இனிமேலும் தொடர்ந்து நடிக்கத்தான் போகிறேன். எனக்கு ஏற்ற கதாப்பாத்திரங்கள், நல்ல டீம் வந்தால் நடிப்பேன். நான் பதினாறு, பதினேழு வயதில் நடிக்க வந்து இதுவரை 120 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். இப்பொழுது மேக்கப் போட்டு நடிக்கவில்லை என்றாலும் சினிமாவை விட்டு எங்கும் போகல.. அது என் ரத்ததிலேயே ஊறியது.
கமல்ஹாசன் தற்போது குணமாகிக் கொண்டு வருகிறார். ஓடியாடி வேலை செய்தவர் இப்போது ஒரே இடத்தில் இருப்பது அவருக்கு கஷ்டமாக இருக்கிறது..” என்றார் கவுதமி.
“கபாலி படத்தை பார்த்து கமல் விமர்சனம் எழுதியதாக சமூக வலை தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறதே..?” என்று கேட்டபோது, “காலில் அடிபட்டு படுத்திருக்கிற அவரால் எப்படி படம் பார்த்திருக்க முடியும்..? அது தவறான செய்தி..?” என்றார் கவுதமி.












