பெரிய திரையிலிருந்து ‘அன்பே வா’ என்ற புதிய மெகா தொடரின் மூலம் சின்னத்திரைக்கு வருகிறார் ‘குரங்கு பொம்மை’ படத்தின் கதாநாயகியான டெல்னா டேவிஸ்.
2014-ம் ஆண்டில் ‘விடியும்வரை பேசு’ என்ற படத்தின் மூலமாக தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டெல்னா டேவிஸ்.
அதற்குப் பிறகு ‘பட்ற’, ‘49-ஓ’, ‘நனையாத மழையே’, ‘ஆக்கம்’, ‘குரங்கு பொம்மை’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார். மேலும் ‘யூ டூ புரூட்டஸ்’, ‘ஹேப்பி வெட்டிங்’ போன்ற மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது ‘மாங்கல்யம் தந்துனானே’ என்னும் தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் டெல்னா டேவிஸ் தற்போது சின்னத்திரையில் அடியெடு்த்து வைத்திருக்கிறார்.
சன் டிவியில் வரும் நவம்பர் 2-ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள ‘அன்பே வா’ என்னும் மெகா தொடரில் நாயகியாக அறிமுகமாகிறார் டெல்னா டேவிஸ்.
இந்தத் தொடரை சரிகமா இந்தியா லிட் சார்பாக, அதன் துணைத் தலைவரான B.R.விஜயலட்சுமி தயாரிக்கிறார்.
இந்தத் தொடரில் விராட் நாயகனாகவும், டெல்னா டேவிஸ் நாயகியாகவும் நடிக்கின்றனர். மற்றும் வினயா ப்ரசாத், ஆனந்த், கன்யா, ரேஷ்மா, கெளசல்யா செந்தாமரை, பிர்லா போஸ், துரை ஆகியோரும் நடிக்கின்றனர்.
கதை – சரிகமா கதைக் குழு, திரைக்கதை – ராஜஸ்ரீ N.Roy, வசனம் – ரதி பாலா, இசை – தரண் குமார், க்ரியேட்டிவ் – K.சண்முகம், இயக்கம் – ஆர்.பிரின்ஸ் இம்மானுவேல்.
குடும்பப் பின்னணியில், அழகான காதலை மையமாக வைத்து,
இந்த ‘அன்பே வா’ மெகா தொடரின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
வருண் – பூமிகா இருவரும் முற்றிலும் மாறுபட்ட இரு வேறு எதிரெதிர் பின்னணியில் இருந்து வந்தவர்கள்.
நாயகி பூமிகா, மிகவும் பொறுப்பான, தன்னம்பிக்கையுள்ளவள். கிராமத்து சூழலில் வளர்ந்த பாரம்பரியம்பிக்க பெண். நாயகன் வருண், பணக்கார சூழலில் வளர்ந்த ஆடம்பரமான இளைஞன். விதியின் சந்தர்ப்பவசத்தால் இருவரும் ஒரே சூழலில் வாழ நேரிடுகிறது.
இருவரும் அவர்களுக்குள் இருக்கும் உண்மையான அன்பையும், காதலையும் கண்டுபிடித்து, திருமணத்தில் இணைவார்களா என்பதே இந்த ‘அன்பே வா’ மெகா தொடரின் கதைச் சுருக்கம்.