தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தேர்தல் வாக்குப்பதிவு இப்பொழுது மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
காலையில் ஓட்டுப் போட வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி ஓட்டுப் போட்ட கையோடு ஒரு குண்டையும் தூக்கிவீசிவிட்டுப் போயிருக்கிறார்.
‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ என்கிற பெயரை தமிழ்நாடு நடிகர்கள் சங்கம்’ என்று மாற்ற வேண்டுமாய் கோரிக்கை வைத்துள்ளார்.
ரஜினி பேசும்போது, “நாமெல்லாம் ஒரே சாதி, நமக்குள்ளே எப்பவும் ஒற்றுமையா இருக்கணும். சமீப காலத்துல சில வாக்குவாதங்கள் நடந்துவிட்டன. அதுக்காக நமக்குள்ள ஒற்றுமை இல்லன்னு மக்கள், ஊடகங்கள் யாரும் நினைக்கக் கூடாது. ஒரு போட்டி வந்திருச்சு.. இதுல யாரு ஜெயிச்சாலும் அவங்களுக்கு என் வாழ்த்துகள்.
அப்புறம், இரண்டு வேண்டுகோள்கள். முதல் வேண்டுகோள்.. யார் ஜெயித்து பொறுப்புக்கு வந்தாலும் முதலில் ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ என்ற பெயரை எடுத்துவிட்டு ‘தமிழ்நாடு நடிகர்கள் சங்கம்’ என மாற்ற வேண்டும்.
இரண்டாவது, நீங்கள்லாம் ஆயிரம் தடவை யோசிச்சி, நல்லா சிந்திச்சுதான் வாக்குறுதிகளை கொடுத்திருக்கீங்க, ஜெயித்து வந்தவர்கள் உயிரே போனாலும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றணும். அப்படி நிறைவேற்ற முடியாவிட்டால், உடனே ராஜினாமா செஞ்சிருங்க. அது உங்க மனசுக்கும் நிம்மதி, உங்களுக்கும் நல்ல பெயரையும் கொடுக்கும், வருங்காலத்தில் நல்லதொரு எடுத்துக்காட்டாவும் இருப்பீங்க,..” என்றார்.
இன்று மதியம் ஓட்டளிக்க வந்த நடிகர் கமல்ஹாசன் வாக்குப் பதிவு செய்துவிட்டு பேட்டியளித்தார். அப்போது, “பல பெரியவர்கள் ஆசையுடன் எழுப்பிய சங்கம் தென்னிந்திய நடிகர் சங்கம். இந்தியாவில் வட இந்தியாவில்கூட ஒன்று இருக்கிறது, தென்னிந்தியாவில் ஒன்று இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் தென்னிந்திய நடிகர் சங்கம், இந்திய நடிகர் சங்கமாக மாற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. உள்ள பிரிவுகள் போதுமானது,
தேர்தல் முடிந்ததும் மறுபடியும் எல்லாரும் ஒன்றாக சேர வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். தவறுகளை இந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் திருத்திக் கொள்ள வேண்டும், அது அவர்களது கடமை, அதை செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கான சாயல்களும், நேரமும் இது என்று நான் நினைக்கிறேன்..,” என்றார்.
ஆக ரஜினி சொன்னதை கமல் ஏற்க மறுத்திருப்பதால் நடிகர் சங்கத்தின் ஒற்றுமை வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிய கதையாக இருக்கிறது.
அதே நேரம் ரஜினியின் அந்தப் பேச்சுக்கு பின்பு வாக்குப் பதிவு நடைபெறும் இடத்தில் யார் பேட்டி கொடுத்தாலும், அவர்களிடத்தில் பத்திரிகையாளர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டு வருகிறார்கள்.
நடிகர் சரத்குமார் இதற்கு பதிலளிக்கையில், “ரஜினி ஒரு யோசனை சொல்லியிருக்கிறார். அதை ஜெயித்து வருபவர்கள் கூடிப் பேசி முடிவெடுப்பார்கள்..” என்று சொன்னார்.
நடிகர் ராதாரவியும் இதேபோல, “தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இது பற்றி யோசித்து முடிவெடுப்போம்..” என்றே சொல்லியிருக்கிறார்.
விஷால் அணி சார்பில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் கார்த்தியிடம் இது பற்றி கேட்டபோது, “முதலில் ஜெயிப்போம். அப்புறம் சங்கத்தின் பெயரை மாற்றுவது பற்றி யோசிப்போம். இப்போதைக்கு நடிகர் சங்கத்தின் பெயர் மாற்றத்தைவிட செயல்பாடுகள்தான் மிகவும் முக்கியம்..” என்றார்.
நடிகர் பிரபு இது பற்றி கூறுகையில், “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன்” என்றார்.
நடிகர் எஸ்.வி.சேகர் இது பற்றி கூறுகையில், “உடனேயே இது பற்றி முடிவெடுத்துவிட முடியாது. இதற்கு நிறைய பார்மாலிட்டிகள் இருக்கின்றன. அதையெல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டும். யோசித்துதான் முடிவெடுக்க வேண்டும்…” என்றார்.
நடிகர் சிம்பு கூறுகையில், “இது நல்ல யோசனைதான். நிச்சயம் வரவேற்கத்தக்கதுதான்..” என்றார்.
நடிகர்-இசையமைப்பாளர் கங்கை அமரன் பேசும்போது, “எல்லாரும் அவங்கவங்க மாநிலத்துல அவங்கவங்க மொழியின் பெயரில் சங்கத்தை அமைத்துக் கொண்டபோது நாமும் அதேபோல் செய்வது நல்லதுதான். இதை நான் வரவேற்கிறேன்..” என்றார்.
நடிகர் விவேக் பேசும்போது, “பெயர் மாற்றமெல்லாம் ஒரு விஷயமே இல்லை. நாடக கலைஞர்களுக்கு முதலில் நல்லது செய்ய வேண்டும். அதுதான் முக்கியம்..” என்றார்.
நடிகைகள் அம்பிகா இது பற்றிபேசும்போது அதிசயமாக எதிர்ப்பு தெரிவித்தார். “நடிகர், நடிகையரிடையே இனம், மொழி, மாநிலம் என்று பிரித்துப் பார்க்கக் கூடாது..” என்றார்.
கமல்ஹாசனின் பெயர் மாற்ற எதிர்ப்புக்கு சரத்குமார் அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் “கமல்ஹாசன் வேண்டுமானால் ஆந்திரா, கர்நாடகா, மலையாள தேசங்களில் போய் இதைச் சொல்லட்டும். அவங்க செய்வாங்களான்னு பார்ப்போம்..” என்கிறார் சூடாக..
ஆக.. தேர்தல் முடிவதற்குள்ளேயே அடுத்தக் கட்ட பிரச்சினையும் ஆரம்பமாகிவிட்டது என்பது மட்டும் உண்மை.