தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியானாலும் மிகப் பெரிய அளவுக்கு பெயரைப் பெற்றுக் கொடுத்தது.
இது கொரானோ காலம் என்பதால் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் சத்தமில்லாமல், கூட்டம் கூட்டாமல் நடைபெற்று வருகிறது. அதுபோல் சத்தமேயில்லாமல் சூர்யா ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தை இயக்கிய இயக்குநரான டி.ஜே.ஞானவேல் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் சூர்யா நடிப்பதோடு, படத்தையும் தயாரித்து வருகிறார். இப்படத்தில் ‘கர்ணன்’ பட நடிகை ரஜிஷா விஜயனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இருளர் மற்றும் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்தப் புகைப்படங்களில் வக்கீல் வேடத்தில் சூர்யா நடிப்பது போன்ற காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.

படம் பற்றிய கூடுதல் செய்திகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









