நடிகர் கவுண்டமணி நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’.
இந்தப் படத்தில் கவுண்டருடன் சவுந்தர்ராஜன் மற்றும் ரித்விகா இருவரும் காதல் ஜோடியாக நடிக்கிறார்கள். கேரவன் கிருஷ்ணன் என்ற பெயருடன் சினிமாவுக்கு கேரவன் வேன்களை சப்ளை செய்யும் தொழிலதிபராக நடிக்கிறார் கவுண்டமணி. அதோடு ஜாதி விட்டு ஜாதி காதல் செய்யும் காதலர்களை இணைத்து வைப்பதையும் பார்ட் டைம் வேலையாகச் செய்கிறார். அப்படி இந்த சவுந்தர்ராஜன்-ரித்விகா ஜோடியை சேர்த்து வைக்க கவுண்டமணி செய்யும் செயல்களே படத்தின் திரைக்கதையாம்.
இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. வெளியில் இரண்டு பெரிய போஸ்டர்களை வைத்த்தினால் தியேட்டருக்குள் கட்டுக்கடங்காத கூட்டம். கவுண்டமணியை பார்க்க வந்த கூட்டத்தில் வெந்து தணிந்தது அரங்கம்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் சீனு ராமசாமி, பிரபாகரன், சுசீந்திரன், பேரரசு, ராம்தாஸ் இவர்களுடன் நடிகர் சந்தானமும் கலந்து கொண்டனர்.
சீனு ராமசாமி பேசும்போது, “கவுண்டமணி அண்ணன் கவுண்ட்டர் அட்டாக் கொடுப்பதெல்லாமே என்கவுண்ட்டர்தான். அதற்குப் பிறகு மறு பேச்சே இல்லை. அவர் நீண்ட நாள் வாழ வேண்டும்..” என்று வாழ்த்தினார்.
நடிகரும், இயக்குநருமான ராம்தாஸ் பேசும்போது, “நான் என்னோட கல்யாணப் பத்திரிகை கொடுக்க அவர் வீட்டுக்குப் போனேன். அப்போ அவர் சேர்ல உக்காந்திருந்தார். அவர் பக்கத்துல நாய் ஒண்ணு படுத்திருந்துச்சு. ‘இந்த நாயோட பேர் என்னண்ணே?’ன்னு கேட்டேன். ‘அதாம்பா நாயு’ன்னார்.. ‘அதுக்கெதுக்கு தனியா பேர் வைச்சு அதையும் ஞாபகத்துல வைச்சுக்கணுமா?’ன்னு திருப்பிக் கேட்டார்.
என் கல்யாண வரவேற்புக்கு நேரில் வந்து வாழ்த்தினார். இதுக்கப்புறம்தான் என் மாமனார் வீட்ல நான் சினிமாக்காரன்னே நம்புனாங்க. கவுண்டமணி அன்னிக்கு பார்த்த மாதிரியே இன்னிக்கும் அதே எனர்ஜியோட, சந்தோஷத்தோட, உற்சாகத்தோட இருக்கார். இது என்னிக்கும் தொடரணும். கவுண்டமணி சிறிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்து அவர்களையும் வாழ வைக்க வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டார்.
விஜய் சேதுபதியும், சந்தானமும் தங்களது பேச்சில், மேடையில் அமர்ந்திருந்த கவுண்டர் அடித்த கவுண்ட்டர் அட்டாக்குகளை சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது.
இதற்கு பின்பு திடீரென்று மைக்கை பிடித்த ஒரு கவிஞர் செந்தமிழில் படத்தின் தயாரிப்பாளரை வாழ்த்தியபோது அந்த வாழ்த்து வரிகள் ஒவ்வொன்றிற்கும் கவுண்டமணி கொடுத்த பாடி லாங்குவேஜ் நடிப்பில் தொடர்ச்சியாக 2 நிமிடங்கள் அரங்கமே கை தட்டி ஆரவாரம் செய்தது.
கடைசியாக நடிகர் கவுண்டமணி பேசும்போது, “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கும் அத்தனை பேருக்கும் எனது நன்றி.
சினிமா துறை இப்போ ஸ்டரக் ஆகி நிக்குறதா சொல்றாங்க.. இப்போ வர்ற சினிமாக்கள் சரியா ஓடுறது இல்லைன்னு பரவலா ஒரு பேச்சு.. இதுக்கு ஒரு காரணம் மட்டுமில்ல.. பல காரணங்கள் இருக்கு.
இப்போவெல்லாம் சினிமா பார்க்குறவங்களைவிடவும் நடிக்கிறவங்க அதிகமாயிட்டாங்க. இதுனால அதிகமா படங்கள் வந்துக்கிட்டிருக்கு. படம் அதிகமா வந்தாலும் தியேட்டர்கள் கிடைக்க மாட்டேங்குது. இதுனால பல படங்கள் வெளியாகமலேயே தேங்கிக் கிடக்குது.
ஒரு படத்தை ஒரு ஷோ ஓட்டுறாங்க. 26 தியேட்டர்ல ஒரு ஷோ ஓடுது. படத்தைப் பார்க்கலாம்னு ஒரு ரசிகன் தியேட்டருக்கு போனா ‘ஸார் அது நைட் ஷோதான் ஓடுது’ன்னு சொல்றாங்க. சரி.. இன்னொரு தியேட்டர்ல ஓடுதே அங்க போய் பார்க்கலாம்னு போனா, ‘ஸார் அது காலைலேயே முடிஞ்சிருச்சே’ன்னு சொல்றாங்க.. இன்னொரு தியேட்டருக்கு ஓடுனா ‘ஸார் அதை நேத்தே தூக்கியாச்சே’ன்னு சொல்றாங்க..
இதை சரி பண்ணணும். ஒரு படத்துக்கு இத்தனை தியேட்டர்தான்னு சொல்லி முறைப்படுத்தணும். கட்டுப்படுத்தணும்.. இதைச் செஞ்சாத்தான் சினிமா பிழைக்கும். சம்பந்தப்பட்டவங்க இதைச் செஞ்சா நல்லாயிருக்கும். இப்படி செய்தால் தயாரிப்பாளர்களுக்கும் ஆரோக்கியம்.. படத்தை வாங்கி வெளியிடுற விநியோகஸ்தர்களுக்கும் ஆரோக்கியம். படத்தைத் திரையிடுற தியேட்டர்காரர்களுக்கும் ஆரோக்கியம். இப்படி எல்லாரும் ஆரோக்கியமா இருந்தால்தான் நம்ம தமிழ் சினிமாவும் ஆரோக்கியமா இருக்கும்.
சமீபத்துல ஒரு படம் நல்லாயிருக்குன்னு சொன்னாங்க. என் பிரெண்டுகிட்ட ‘அந்தப் படத்தைப் பார்த்தியாப்பா?’ன்னு கேட்டேன். ‘இல்லை’ன்னான். ‘நாளைக்கு பார்த்திட்டு வந்து சொல்லேம்பா’ன்னு சொன்னேன். ‘நாளைக்கு போறேன்’னான்.. அடுத்த நாள் கேட்டேன். ‘டிக்கெட் ஹவுஸ்புல்’லுன்னான்.. ‘அப்போ படம் நல்லாத்தான போகுது’ண்ணேன்.. ‘இல்ல நான் சொன்னது ரயில் டிக்கெட்.. நான் ஊருக்கு போயி அந்தப் படத்தைப் பார்க்கலாம்னு இருக்கேன்’னான்.. ஊருக்குப் போயிட்டு வந்தப்புறம் கேட்டேன். ‘நான் போறதுக்குள்ள அந்தப் படத்தைத் தூக்கிட்டாங்க’ன்னான். இதுதான் இப்போ இங்க நடக்குது.
அதுனாலதான் சொல்றேன்.. தயாரிப்பாளர் சங்கம் இதுல தலையிட்டு ஒரு கட்டுப்பாடு கொண்டு வந்து எல்லா படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்கிற மாதிரி செஞ்சா தமிழ் சினிமா ஆரோக்கியமா இருக்கும்.
இந்தப் படத்தோட தயாரிப்பாளரும், இயக்குநரும் என்கிட்ட வந்து கதையைச் சொன்னாங்க. ‘முழுக்க, முழுக்க கேரவன் வேன்லயே படத்தை ஷூட் செய்யப் போறோம்’ன்னு சொன்னாங்க.. அப்புறம் ‘படத்துல ஒரு சோஷியல் மெஸேஜ் சொல்றோம்’ன்னாங்க. அதாவது ‘ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் செய்ற காதலர்களுக்கு கல்யாணம் செஞ்சு வைக்குற மாதிரி கேரக்டர் உங்கது’ன்னு சொன்னாங்க. நல்ல விஷயமாச்சேன்னு யோசிச்சேன். இப்போ இந்தக் காலத்துக்கு இது அவசியமானதுதான்.. இப்பத்தான் அது மாதிரி நிறைய பிரச்சினையெல்லாம் நம்மூர்ல நடக்குதே.. இப்போதான் இந்த மாதிரி படங்கள் அவசியம்னு நடிக்க ஒத்துக்கிட்டேன்..
படத்துல சென்னைல இருந்து செங்கல்பட்டுவரைக்கும் கதை ரோட்டுலேயும், கேரவன்லேயும் நகரும். அப்புறம் செங்கல்பட்டுல இருந்து மதுரைவரைக்கும் கேரவன்லதான் படமே தொடருது. கடைசியா மதுரைலதான் கிளைமாக்ஸ். அதுக்கப்புறம் ஒரு சின்ன ஆபரேஷன். அதுதான் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது.’
இந்தப் படத்துல எல்லா அம்சங்களும் இருக்குது. மதுரைக்குப் போறதுக்குள்ள படத்துல பேமிலி சென்டிமெண்ட், காதல், எமோஷன், இதுகூட கொஞ்சம் திரில்லிங்கும் இருக்கு. அதுனால இந்தப் படம் எல்லாரும் குடும்பத்தோட பார்க்க வேண்டிய படம்.
இந்தப் படத்தைப் பார்த்துட்டு தியேட்டர்ல இருந்து வெளில வர்ற ஒவ்வொரு ரசிகனுக்கும் எப்படியிருக்கும்ன்னா.. ஒரு பீட்சா சாப்பிட்டுட்டு அப்புறம் சிக்கன் பர்கர் சாப்பிட்டுட்டு அப்புறம் ஒரு கோக் அடிச்சிட்டு கடைசியா ஒரு கூல்டிரிங்க்ஸும் சாப்பிட்ட திருப்தியோட வெளில வருவாங்க.. இது ஒரே கல்லுல மேல பறக்குற ரெண்டு பிளைட்டை வீழ்த்துற மாதியிருக்கும்.. கண்டிப்பா எல்லாரும் படத்தைப் பாருங்க..” என்றார்.
படத்தின் டிரெயிலரில் வரும் ஒரு காட்சியில் “இந்தக் கால்ல விழுகுறதை எவன் கண்டுபிடிச்சான்னு தெரியலை.. ஆனா.. ஊன்னான்னா கால்ல விழுகுறாங்க..” என்று காலில் விழும் கலாச்சாரத்தை வாரு, வாரு என்று வாரியிருக்கிறார் கவுண்டர். டிரெயிலரிலேயே படத்தின் கதைக் கருவையும், கவுண்டரின் கவுண்ட்டர் அட்டாக் எப்படியிருக்கும் என்பதையும் ஒரு சேர காட்டியிருக்கிறார்கள்.
வி ஆர் வெயிட்டிங் கவுண்டரே..!