ஒரு நடிகர் ஒரே பட நிறுவனத்தின் படங்களில் தொடர்ந்து நடிப்பது அவரது திறமையையும் தாண்டி தொழில் பக்தியையும் குறிப்பபிடும். அந்த வகையில் ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிறுவனத்தில் தொடர்ந்து நடிப்பதன் மூலம் நடிகர் பாபி சிம்மா சிறப்பு அந்தஸ்து பெறுகிறார்.
நடிகர் பாபி சிம்ஹா தற்போது இதே நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் கோ படத்தின் 2-ம் பாகத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அதே நேரம் இதே நிறுவனம் தயாரிக்கும் அடுத்த புதிய படமான ‘வீரா’ படத்திலும் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இது பற்றி பேசிய தயாரிப்பாளர் எல்ரெட் குமார், “ஒரு நிறுவனத்துக்கு ஒரு நடிகர் மூன்று படங்களில் ஏறத்தாழ ஒரே காலக்கட்டத்தில் நடிக்கிறார் என்பதில் இருவருக்கும் பெருமையும் அந்தஸ்தும்கூட. வெவ்வேறு கதைகள், வெவ்வேறு இயக்குனர்கள் என்றாலும் அதே நடிகர் என்பதில் ரொம்பவும் சௌகரியம்தான். இது திட்டமிடப்பட்டது என்பதைவிட தானாக அமைந்தது என்றே சொல்லலாம்.
பாபி சிம்ஹாவின் இந்த தொழில் நேர்மைக்கு நாங்கள் கொடுக்கும் பரிசுதான் இந்த ‘வீரா’ என்கிற படம். ரஜினி சாரின் இந்த படத் தலைப்பைவிடவும் அவருக்கு நாங்கள் சிறந்த பரிசாக எதைக் கொடுத்துவிட முடியும்..? ஒரு நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்துவரும் கதாநாயகன் பாபி சிம்மாவுக்கு ‘வீரா’ மேலும் ஒரு மணி மகுடம் ஆகும்.
புதிய நாயகி ஐஸ்வர்யா மேனன் இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் பாலசரவணன் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
நகைசுவையுடன் action கலந்த இந்த ஜனரஞ்சகமான கதைக்கு பிரபல எழுத்தாளர் பாக்கியம் சங்கர் கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறா . எனது நிறுவனம் சார்பாக பல்வேறு திறமையான புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன். அந்த வகையில் இந்த படத்தின் இயக்குநரான கே.ராஜாராம் எங்கள் நிறுவனத்துக்கு பெரும் பெருமை சேர்ப்பார் என்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை உண்டு.
விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள இந்த படத்துக்கு மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது…” என்று பெருமிதத்துடன் கூறுகிறார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.