நடிகர் பரத்தை வைத்து காமெடி படம் என்கிற விஷயமே காமெடியாகத்தான்பட்டது. ஆனால் இந்த ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ படத்தின் இயக்குநர் ரவிசந்தர் சொல்வதைப் பார்த்தால் நம்பித்தான் ஆக வேண்டும்போல உள்ளது.
“இது டென்ஷனான உலகம். எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழற மனநிலைதான் பெரும்பாலானவங்களுக்கு. நம்ம வாழ்க்கை முறை அப்படி பழக்கி வச்சிருக்கு. பணம் தேடி ஓடுற வாழ்க்கை பிரஷரையும் ஏராளமான நோய்களையும் கொண்டு வந்து தந்திருக்கு. இதோட படம் பார்க்க வர்றவங்களை கூல் பண்ணி அனுப்பினா அதுவே பெரிய மருந்துதான். அப்படி நெனைச்சு உருவாக்கப்பட்ட படம்தான் இது. இரண்டரை மணி நேரம் விழுந்து சிரிச்சு, சிரிச்சு விழுந்துன்னு ரசிகர்களை ஜாலியா இருக்க வைக்கும்.
காமெடின்னு முடிவு பண்ணின பிறகு அதுக்கு ஏற்ற ஆட்களை புக் பண்ணினோம். தம்பி ராமையா, கருணாகரன், மனோபாலா, இமான் அண்ணாச்சி, மதன்பாப், சாம்ஸ் உட்பட 21 காமெடியன்கள் நடிக்கிறாங்க. ஒரு காமெடிக்கு சிரிச்சு முடிச்சா, அடுத்த காமெடி வந்து முன்னால நிற்கும். பி.ஜி.முத்தையாவோட ஒளிப்பதிவு பளிச்சுன்னு இருக்கும். சைமன் இசை அமைச்சிருக்கார். கன்னடத்துல டாப் காமெடியனா இருக்கிறவர் கோமல்குமார். கன்னட ‘சந்திரமுகி’யில் வடிவேலு கேரக்டர் பண்ணியவர் இவர்தான். புதுசா ஒரு முகம் தேவைப்பட்டது. அதனால அவரைக் கொண்டு வந்திருக்கோம். அவருக்கும் பரத்துக்குமான காமெடி கலக்கலா வந்திருக்கு.
‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’யா இருக்கிறவர் பரத். படிப்பறிவு இல்லாத அவரோட நண்பர்கள் அவரை ஏமாற்றி வாழறாங்க. ஒரு கட்டத்துல இது பரத்துக்கு தெரிய வருது. அதுல இருந்து தப்பிக்க படிச்ச ஒரு பெண்ணை மனைவியா ஆக்கணும்னு நினைக்கிறார். அது எப்படி நடக்குது அப்படிங்கறதுதான் கதை.
அப்பாவி மருத்துவராக, படிப்பறிவு இல்லாதவராக, நண்பர்களோட அரட்டை அடிக்கிறவரானு அவரோட மேனரிசம் எல்லாத்தையும் மாத்தியிருக்கோம். காமெடி அவருக்கு ரொம்ப இயல்பா வருது. கதைப்படி அவர் சீரியசாக வந்தாலும் ஆடியன்சுக்கு காமெடியாதான் இருக்கும்.. ‘அட்டகத்தி’ நந்திதா கேரக்டர் பேர் நந்தினி. தம்பி ராமையாவோட செல்லப் பொண்ணு. பரத்துக்கு நந்திதாவை பார்த்ததும் காதல் பத்திக்குது. எம்.பி.பி.எஸ். டாக்டர்ன்னு பரத்தை நினைக்குறதும் அடுத்தாப்புல நடக்கிற காதல் விஷயங்களும் காமெடியாத்தான் இருக்கும்.
இப்ப சித்த வைத்தியம்னா, ஆண்மை விருத்தி மருந்து… இல்லை…. இல்லை… அப்படி சில வைத்திய சாலைகள் இருக்கு. அதை வச்சு தப்பா காமெடி ஏதும் பண்ணலை. சித்த வைத்திய மருத்துவத்துக்கு பெரிய மகத்துவம் இருக்கு. புனிதத்துவம் இருக்கு. அதை மீறாம சொல்லியிருக்கோம். இதுக்காக கொல்லிமலை, சேலம்னு அலைஞ்சு ரிசர்ச் பண்ணியிருக்கேன். என்ன மாதிரியான மூலிகையை பயன்படுத்துறாங்க. நோயாளிகளோட எப்படி பழகுறாங்க. சித்த வைத்தியத்துக்கு என்ன ட்ரீட்மென்டுக்காக அதிகம் வர்றாங்கன்னு நிறைய ஆராய்ச்சி பண்ணி, திரைக்கதை அமைச்சிருக்கேன். அதனால இயல்புக்கு மீறி எதுவும் இருக்காது. அதே மாதிரி வில்லங்கமான மேட்டர் எதுவும் இதுல இருக்காது…” என்று உறுதியிட்டுச் சொல்கிறார் இயக்குநர்.
அதையும்தான் பார்த்திருவோம்..!!!