ஸ்டுடியோ 9 சுரேஷ் மற்றும் பிக்சல் ஃபிலிம்ஸ் புரோடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘ஆயா வட சுட்ட கதை.’
இதில் அவிட்டி என்பவர் ஹீரோவாக அறிமுகமாகிறார். சுபுர்ணா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் துரைப்பாண்டி, ரங்கபாஷ்யம் மற்றும் பல புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – எஸ்.பி.பாலாஜி. வி.விஜயன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். முகமது இலியாஸ் கலை இயக்குநர். திரில்லர் முகேஷ் சண்டை பயிற்சியாளர். கோபி நடனப் பயிற்சியை செய்துள்ளார். சமீர்-சிவா இருவரும் இசையமைத்திருக்கிறாகள். வசந்த்-நவின் பாடல்களை எழுதியுள்ளனர். வி.பனீந்திரா எழுதி, இயக்கியிருக்கிறார்.
படத்தின் தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே.. கதையென்ன என்று இயக்குநரிடம் கேட்டபோது, “இந்தக் கதை நடக்கும் களம் ஒரு பரபரப்பான நகரத்தில் இருக்கும் பல்வேறுவிதமான மக்கள் வசிக்கும் ஒரு குடியிருப்பு. இந்தக் குடியிருப்பில் வசிப்பவர்கள் அருகில் வசிப்பவர்கள் யார் என்றுகூட அறியாதவர்கள். ஆனால் இந்தக் குடியிருப்பை வலம்வரும் பேப்பர் போடுபவர்கள், இஸ்திரீ செய்பவர்கள், காவலாளி, கார் டிரைவர் போன்றவர்கள் அங்கு வசிக்கும் அனைத்து குடியிருப்பு வாசிகளைப் பற்றியும் நன்கு அறிந்தவர்கள்.
பணியாளர்களுக்கும், அங்கு புதிதாக குடி வந்த சட்ட விரோதிகளுக்கும், அங்கேயே குடியிருக்கும் தற்காலிகமாக வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரிக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்த ‘ஆயா வட சுட்ட கதை’ படத்தின் கதை. இதில் யார் ஆயா, யார் காக்கா, யார் நரி என்பது படம் பார்த்தால்தான் புரியும்.. சுருக்கமாகச் சொல்வதென்றால் இது ஒரு முக்கோண ஏமாற்றுக் கதை..” என்றார் இயக்குநர் பனீந்திரன்.