‘ஆலம்பனா’ என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டபோதே அப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. காரணம், அப்படத்தின் கதையம்சம் பேண்டஸி வகையைச் சார்ந்தது என்பதால்..!
பிரமிக்க வைக்கும் அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடி இருக்கிறார்கள். அதைப் போன்ற ஒரு அபூர்வ கதையம்சத்தில் இன்றுள்ள குழந்தைகளுக்கும் இப்போதுள்ள ட்ரெண்டுக்கும் ஏற்ற வகையில் இந்த ‘ஆலம்பனா’ திரைப்படம் பிரம்மாண்டமாக தயாராகிறது.
‘விஸ்வாசம்’ படத்தை பெரியளவில் வெளியிட்டு பெரும் வெற்றியை கண்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும் தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.
முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பேண்டஸி படமாக இப்படத்தை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநரான பாரி.கே.விஜய். இவர் ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ ஆகிய தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிவர்.
மக்களை எண்டெர்டெயின்மெண்ட் பண்ணும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் வைபவ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார். இதுவரையிலும் ‘வைபவ்’ நடித்த படங்களிலேயே இந்த ‘ஆலம்பனா’தான் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. மேலும், வைபவ்வின் கேரியரில் இது மிக முக்கியமான படமாகவும் அமையவுள்ளது.
படத்தில் முனிஷ்காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பல வருடங்களுக்குப் பிறகு பட்டிமன்றங்களின் ஹீரோவான திண்டுக்கல் ஐ.லியோனியும் இப்படத்தில் நடிக்கிறார்.
மேலும், படத்தின் கலகலப்பிற்கு உத்திரவாதம் தருவது போல காளி வெங்கட், ஆனந்த்ராஜ் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். நடிகர் பாண்டியராஜன், முரளி சர்மா ஆகியோர் வெயிட் கேரக்டர்களில் நடிக்க, ‘வேதாளம்’ படத்தில் வில்லனாக மிரட்டிய கபீர்துபான் சிங் வில்லன் வேடமேற்றிருக்கிறார்.
மிக வித்தியாசமான இந்தக் கதைக் களத்தில் பலம் வாய்ந்த டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளது. சமீபத்தில் வெளியான ‘கோமாளி’ படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் தெறிக்கவிட்ட ‘ஹிப் ஹாப்’ ஆதி இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார்.
‘நெடுநல்வாடை’ படத்தில் கிராமத்தின் அழகை துளியும் குறையாமல் தன் கேமராவிற்குள் கொண்டு வந்த வினோத் ராமசாமி ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
‘ராட்சசனில்’ தன் இமாலாய உழைப்பைக் கொடுத்த படத் தொகுப்பாளர் ஷான் லோகேஷ் இந்தப் படத்திலும் படத் தொகுப்புப் பணியைச் செய்கிறார். மாஸான சண்டைக் காட்சிகளால் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் பீட்டர் கெய்ன் சண்டை காட்சிகளை இயக்கம் செய்யவிருக்கிறார். கலை இயக்குநராக கோபி ஆனந்த் பங்கேற்கிறார்.
படத்தில் பங்கு பெறும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் படம் தாங்கி நிற்கும் கதையம்சம் அனைத்துமே ஈர்க்கக் கூடியளவில் இருக்கும் இந்த ‘ஆலம்பனா’ திரைப்படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று மிகப் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது.
இந்த பூஜை நிகழ்வில் நாயகன் வைபவ், நாயகி பார்வதி நாயர், இயக்குநர் பாரி கே.விஜய் உள்பட ஒட்டு மொத்த படக் குழுவும் கலந்து கொண்டனர்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக ‘நேற்று இன்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார், ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ படங்களின் இயக்குநர் ராம்குமார், ‘குலேபகாவலி’, ‘ஜாக்பாட்’ ஆகிய படங்களின் இயக்குநர் கல்யாண், ‘பலூன்’ படத்தின் இயக்குநர் சினிஸ், ‘டோரா’ படத்தின் இயக்குநர் தாஸ்.ராமசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.