நடிகர் ரஜினிகாந்த் நடித்த பல படங்களின் தலைப்புகளை தற்போது மீண்டும் புதிய படங்களுக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் 1983-ம் ஆண்டு ரஜினியின் நடிப்பில் வெளியான ‘துடிக்கும் கரங்கள்’ டைட்டிலேயே தற்போது புதிய படம் உருவாகியுள்ளது.
இந்தப் புதிய ‘துடிக்கும் கரங்கள்’ படத்தை ‘ஓடியன் டாக்கீஸ்’ நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் கே.அண்ணாத்துரை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் நடிகர் விமல் நாயகனாக நடிக்கிறார். மும்பையை சேர்ந்த மனிஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துள்ளதுடன், கன்னடத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் சுரேஷ் மேனன், சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – ஓடியன் டாக்கீஸ், தயாரிப்பாளர் – கே.அண்ணாத்துரை, இயக்கம் – வேலுதாஸ், இசை – ராகவ் பிரசாத், ஒளிப்பதிவு – ராம்மி, படத் தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், கலை இயக்கம் – கண்ணன், சண்டைப் பயிற்சி இயக்கம் – சிறுத்தை கணேஷ், பத்திரிகை தொடர்பு – K.S.K.செல்வா.
இந்தப் படத்தை இயக்குநர் வேலுதாஸ் இயக்கியுள்ளதுடன், இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுளார். இவர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, நந்தா பெரியசாமி, ‘வெற்றிவேல்’ இயக்குநர் வசந்தமணி ஆகிய இயக்குனர்களிடம் பணிபுரிந்தவர். கனவு என்கிற குறும்படத்தை இயக்கியதற்காக கனடா சர்வதேச திரைப்பட விருது பெற்றவர்.
மும்பையை சேர்ந்த ‘இந்தியன் சகீரா’ என அழைக்கப்படும் சினேகா குப்தா இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். படத்தின் ஹை லைட்டான அம்சங்களில் ஒன்றாக அந்தப் பாடல் இருக்கும்.
பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் நிழலாகவே, அவருடன் 23 வருடங்கள் உதவியாளராக பணியாற்றிவரும், அவரது சகோதரர் மகன் ராகவ் பிரசாத் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்மி ‘யாமிருக்க பயமே’ படத்தில் பணியாற்றியவர். அதுமட்டுமல்ல இந்தியில் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் மூன்று படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்திற்கு பணியாற்றிய லாரன்ஸ் கிஷோர் இந்தப் படத்தின் படத் தொகுப்பை கவனிக்கிறார். ‘சக்ரா ‘ படத்திற்கு பணியாற்றிய கண்ணன் இந்தப் படத்தின் கலை வடிவமைப்பை கையாண்டுள்ளார். படத்தில் இடம் பெறும் நான்கு சண்டை காட்சிகளையும் ‘சிறுத்தை’ கணேஷ் வடிவமைத்துள்ளார்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் வேலுதாஸ் பேசும்போது, “இந்தப் படத்தில் யூ டியூப் சேனல் நடத்தும் நிருபராக விமல் நடித்துள்ளார். அவரது நண்பராக சதீஷ் நடித்துள்ளார். ஒரு நிருபர் தன் வேலையை செய்கிறார். அதனால், அவருக்கு மிகப் பெரிய இடத்தில் இருந்து ஏற்படும் எதிர்ப்பு மற்றும் பிரச்சனைகளை எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இதுவரை நகரத்து இளைஞனாக அதிகம் நடித்திராத ஒருவர் நடித்தால், அந்த கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால், இந்த படத்திற்கு ஹீரோவாக விமலை தேர்வு செய்தோம். விமல் படப்பிடிப்பில் எங்களுக்கு அருமையாக ஒத்துழைப்பு தந்தார். நடிகர் சுரேஷ் மேனனும் ஒரு ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்பதால், எனக்கு இருக்கும் சுமையை புரிந்து கொண்டு, அதை எளிதாக்கும்விதமாக நடித்து கொடுத்தார்..” என்கிறார்.
நகரத்து கதை என்பதால் சென்னையிலேயே 45 நாட்கள் மொத்த படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது.
தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.









