‘க.க.க.போ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை கமலா திரையரங்கில் நடைபெற்றது.
இந்தப் படத்தில் நாயகனாக கேசவனும், நாயகியாக சாக்க்ஷி அகர்வாலும் நடித்துள்ளனர். மேலும் கருணாஸ், பவர் ஸ்டார் சீனிவாசன், சுப்பு பஞ்சு, சிங்கம் புலி, மயில் சாமீ, மதன் பாப், எம்.எஸ்.பாஸ்கர், வடிவுக்கரசி, அனுமோகன், ராஜஸ்ரீ, நிரோஷா, ஆதவன், ரோபோ சங்கர், சங்கிலி முருகன், மதுமிதா. சாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – விக்ரமன், இக்பால், இசை – பி.சி.சிவம், சி.வி. அமரா, தினா, படத் தொகுப்பு – பிரபாகர், கலை – ரவீந்திரன், பாடலாசிரியர்கள் – கானா பாலா, பி.எஸ்.விஜய், கு.கார்த்தி, சண்டை பயிற்சி – விஜய் ஜாக்குவார், நடனம் – சாண்டி, சுரேஷ், புகைப்படம் – சந்துரு, விஜய், தயாரிப்பு – செல்வி சங்கர், சங்கர், எழுத்து இயக்கம் – பி .எஸ். விஜய்.
இவ்விழாவில் அன்பு பிக்சர்ஸ் அன்பழகன், பஞ்சு சுப்பு, பவர் ஸ்டார் சீனிவாசன், ஆதவன், சாக்க்ஷி அகர்வால், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் செல்வி சங்கர், சங்கர் இசைமைப்பாளர்கள் பி.சி.சிவம், சி.வி.அமரா, இயக்குநர் கேபிள் சங்கர், விஜய் ஆதிராஜ், உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்களுடன் இப்படத்தை வெளியிடும் தேவர் பிலிம்ஸின் சி.எ. பாரதி ஐய்யப்பனும் கலந்து கொண்டார்.
இதன் ஆடியோவை அன்பு பிக்சர்ஸ் நிறுவன உரிமையாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் வெளியீட ‘க.க.க.போ.’ படத்தின் தயாரிப்பாளர் செல்வி சங்கர் உள்ளிட்ட ‘க.க.க.போ.’ படக் குழுவினர் பெற்று கொண்டனர்.
இந்த நிகழ்வில் நடிகர் பஞ்சு சுப்பு பேசும்போது, “எல்லாரும் ‘உயிரைக் கொடுத்து நடித்தேன்’ என்பார்கள். ஆனால் நான் இந்தப் படத்திற்காக மயிரைக் கொடுத்து நடித்திருக்கிறேன்.
இந்தப் படத்தில் எனக்கு மிக முக்கியமான ஒரு ரோல். ஒரு பெண் வேடத்தில் நடித்திருக்கிறேன். இதற்காக எனது உடலில் இருக்கும் ஒரு சிறிய முடியைக்கூட விடாமல் மழித்துவிட்டார்கள். மீசை மட்டுமல்லாது கண் புருவத்தையும் வழித்துக்கொண்டு ஒரு வாரமாக வெளியே செல்ல முடியாமல் தவித்தேன். நெருங்கிய உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்கூட போக முடியலை. ஆனாலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு நடித்திருக்கிறேன்ன். உண்மையாகவே படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது..” என்றார்.
பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும்போது, “இந்தப் படத்தில் எனக்காகவே ஒரு பாடல் காட்சி கொடுக்கப்பட்டது. அது எனது நிஜ கேரக்டரை சொல்லும்விதமாக இருந்தது. இந்தப் படத்தில் நான் நடித்த காட்சிகளும் கோர்ட்டை மையப்படுத்தியே அமைந்திருந்த்து. உண்மையில் என் நிஜ வாழ்க்கைக்கும் கோர்ட்டுக்கும் நிறைய சம்மந்தம் உண்டு, அதே போல் இந்தப் படத்திலும் மூன்று பெண்களுக்கு கணவன் என்று என் நிஜ வாழக்கையோடு பிரதிபலிக்கும்வகையில் எனது கேரக்டரை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்..” என்றார்.
இயக்குநர் விஜய் பேசும்போது, “இந்தப் படத்தில் நிறைய முன்னணி நட்சத்திரங்களை வைத்து இயக்கியிருக்கிறேன். அவர்கள் அனைவரும் என்னை புதுமுக இயக்குநர் என்றுகூட பார்க்காமல் என்னுடன் அன்பாக நடந்து கொண்டார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தை தயாரித்த செல்வி சங்கர், சங்கர் அவர்களுக்கு மிகவும் நன்றி.
மேலும் கதாநாயகி சாக்ஷி அகர்வால், இணை இயக்குநர் போல் பணியாற்றினார். இப்படத்தை வெளியீடும் தேவர் பிக்சர்ஸ் என் போன்ற புதுமுக இயக்குநர்களுக்கு மிகவும் உதவியிருக்கிறார்கள். அவர்களுக்கும் எனது நன்றிகள்..” என்றார்.
தயாரிப்பாளர் சங்கர் பேசும்போது, “நான் மலேசியாவில் இருந்து வந்த தமிழன் என்கிறார்கள். ஆனால், நான் திருநல்வேலியில் இருந்து மலேசியா சென்ற தமிழன். நான் இப்படத்தை என் மனைவி செல்விக்காக தயாரித்தேன். இதுபோன்று தமிழில் நிறைய திரைப்படங்களை தயாரிக்கப் போகிறேன்.. என்னை இப்படத்திற்கு கொண்டு வந்தவர் இயக்குநர் விஜய்தான். நான் தயாரிப்பாளன் என்ற முறையில் அவருக்கு அணைத்து வசதிகளையும் செய்து கொடுத்தேன். அவரும் இப்படத்தை நன்றாக எடுத்திருக்கிறார். இப்படத்தை வெளியீடும் தேவர் பிக்சர்ஸ் குழுமத்திற்கு மிகவும் நன்றி..” என்றார்.
சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பேசும்போது, “இது போன்று சிறிய படங்கள் நிறைய வர வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள். இப்போது பெரிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கின்றன. ஆனால் சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் வெளியாக முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன. தயாரிப்பாளர் சங்கம் சின்ன பட்ஜெட் படங்களின் இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை காண வேண்டும்.
சில வருடங்களுக்கு முன்பு விஜய் நடிப்பில் வந்த ‘தலைவா’ படம் அன்று வெளிவர முடியாமால் சிக்கலில் இருந்தது. அப்பொழுது நானும் தேவர் பிலிம்ஸ் ஐயப்பனும் ஒரே நாள் இரவில் ‘தலைவா’ படத்தை வாங்கி 300 திரையரங்குகளில் வெளியிட்டோம். இது போன்று பெரிய படங்களே வெளிவர முடியாமல் இருக்கும்பொழுது சிறிய படங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கின்றன. எனவே நானும் இனிமேல் இது போன்ற நிறைய சிறிய படங்களை வாங்கி வெளியீட முடிவு செய்திருக்கிறேன்..” என்றார்.















