சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மகுடம்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை வடபழனி கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது
இந்த விழாவில் நடிகர் விஷால் பேசியதாவது :
“அனைவருக்கும் வணக்கம். ஸ்ரீகாந்த் சாரோடு உட்கார்ந்து எடிட்டிங் வேலை பார்க்கணும். தெலுங்கு டப்பிங் வேலை இருக்கு. அப்புறம் ஜிவி பிரகாஷ் ஸ்டுடியோவிற்கு போகணும். நிறைய வேலை இருக்கு.
எனக்கு முதல்ல இந்தப் படத்தை அமைச்சு கொடுத்த ஆர்.பிசெளத்ரி சாருக்கு நன்றி. அவர் நிறைய நம்பிக்கையைக் கொடுத்தார்.
மேலும் 14 மாதங்கள் படங்களில் நடிக்க முடியாமல் நான் மிகுந்த சிரமத்தில் இருக்கும்போது எனக்கு உறுதுணையாக இருந்து இந்த நொடிவரை உடன் நின்றிருக்கிறார் என் வருங்கால மனைவி சாய் தன்ஷிகா.
வேற யாராவது இருந்தால் பிச்சிக்கிட்டு ஓடிருப்பாங்க. திருப்பூர் சுப்பிரமணியன் அண்ணன் எனக்கு கொடுத்த ஊக்கமும், என் மேல் வைத்த நம்பிக்கையும் வீண் போகக்கூடாது என்பதற்காக அதிகமாக உழைத்தேன்.
அவர் கொடுத்த ப்ளாட்பார்ம்தான் இந்த ‘மகுடம்’ படத்தை வெற்றிப் படமாக மாற்றப் போகிறது. அவருக்கு நான் நன்றி தெரிவிச்சுக்கிறேன்.
படத்தில் நடித்த என்னுடைய சக நடிகர்களுக்கும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும்.
இது எனக்கு ஒரு சவாலான படம். கேமராவிற்கு முன்னாடியும், பின்னாடியும் வேலை நிறைய இருந்தது. ஆக்சன் சொல்லிவிட்டு சில நொடிகள் கழித்தே அனைவரையும் நடிக்கச் சொன்னேன்.
ஏனென்றால் எடிட்டிங் பாயிண்டில் எனக்கு அது உதவியாக இருக்கும் என்பதால். மேலும் என் கலைஞர்கள், “இவன் ஏன் நடிக்கச் சொல்லித் தர்றான்? இவன் ஏன் இசையில் தலையிடுறான்? இவன் ஏன் ஸ்டண்ட் சீன்ல ஐடியா சொல்றான்? என்று யாரும் என்னைக் கேட்கவில்லை.
இந்த ஈகோ இல்லாத கூட்டத்தால்தான் ‘மகுடம்’ படம் இவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறது. நடிகர்களிடம் எப்படி வேலை வாங்கவேண்டும் என்று கத்துக்கிட்டது இயக்குநர் பாலா அண்ணனிடம்தான்.
துஷாரா, அஞ்சலி, ஜான் விஜய், மாயா, அஸ்வின் உள்பட எல்லா நடிகர்களும் நான் சொல்வதை ஏற்று நடித்தார்கள்.
இயக்குநராக வேண்டும் என்பது என் 35 வருட கனவு. அர்ஜுன் சாரிடம் என்னை உதவி இயக்குநராக சேர்ப்பதற்கு நான்கு மணி நேரம் என் அப்பா காத்திருந்தார்.
என்னை ஊக்கப்படுத்தி இன்று என் கனவை நிறைவேற்றி வைத்த அப்பாவிற்கு என் நன்றியை தெரிவிச்சுக்கிறேன். அவருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கேன்.
‘சண்டைக் கோழி’ படம் வரக் காரணம் என் அம்மாதான். என் அப்பாவிடம் “நீங்க செலவு பண்ணலன்னா நான் செலவு பண்றேன்” என்று சொல்லி ‘சண்டைக்கோழி’ படத்தில் என்னை நடிக்க வைத்தார்.
அப்பா, அம்மா இருவருமே என் கேரியரில் எனக்கு ரொம்ப முக்கியம். ஆர்.பி செளத்ரி சார் அறிமுகப்படுத்திய 45-ஆவது புதுமுக இயக்குநர் நான். சூப்பர் குட் பிலிம்ஸின் 99-ஆவது படம் இது.
இந்த இடத்தில் என் குருநாதர் ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் சாருக்கு நன்றி சொல்லிக்கிறேன். அவர்தான் என்னை நடிக்க வச்சார்.
அவரிடம் நான் இயக்குநராக நிறைய கத்துக்கிட்டேன். ராம்கோபால்வர்மாவோட ‘உதயம்’ படம் பார்த்துதான் நான் இயக்குநராகணும்னு நினைச்சேன். இன்னைக்கி வந்து அது நனவாகியிருக்கு.
நம் கனவுகளில் நாம் கான்பிடன்டாக இருந்தால் நிச்சயமாக அது நிறைவேறும். அது எனக்கு மட்டுமல்ல. எல்லாருக்கும்தான். சினிமாத் துறையில் மட்டுமல்ல எல்லாத் துறைக்கும் நான் சொல்வது பொருந்தும்.
இன்னைக்கு என் பசங்க நிறைய பேர் பட்டதாரிகளா இருக்காங்கன்னா அது அவங்களோட தன்னம்பிக்கைதான்.
எனக்கு இந்தப் படத்தில் கேமராமேனாக அமைந்த தம்பி ரிச்சர்ட் எனக்கு ரொம்ப வருசமா பழக்கம். அவருக்கு என் டேஸ்ட் புரியும்.
சுந்தர் சி சார் எல்லாச் சூழலையும் இலகுவாக கையாள்வார். நான் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். பொன்.பார்த்திபன் சார் எனக்கு நன்றாக சிங் ஆகும் டயலாக் ரைட்டர்.
இப்போ ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு ஆர்.ஆர். வாசிச்சுக்கிட்டிருக்கார். அதான் அவர் இங்கு வரலை. ஜி.வி.பிரகாஷ் புதுமுக இயக்குநர்களுக்கு ஒரு வரம். அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. அவர் இந்தப் படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
உமாதேவி, ஏகாதசி, விவேக், கருணா ஆகியோரின் வரிகளுக்கு நன்றி. திலீப்போட புரிதலுக்கு நன்றி.
இந்தப் படத்திலுள்ள க்ளைமாக்ஸ் காட்சி வேறு எந்தப் படத்திலும் வந்ததில்லை. படம் கடைசி எட்டு நிமிடம் மேஜிக் செய்யும்.
எனக்குப் பிடித்த நடிகர் விஜய் இன்று முதல்வராக இருக்கார். அவர் படத்தை நான் எப்படி ரசிச்சுப் பார்ப்பேனோ, அதே ரோஹினி தியேட்டரில் என் ‘மகுடம்’ படத்தையும் பார்க்கப் போறேன்.
ஒரு காலத்தில் ஜான் விஜய்யால் லயோலா காலேஜில் பெரிய கலவரமே நடந்திருக்கு. அப்போதே எனக்கு அவரை நன்றாக தெரியும். அவரின் இயல்பான மேனரிசத்தை இந்தப் படத்தில் பயன்படுத்தியுள்ளேன்.
இளையராஜா சாருக்கு மிக்க நன்றி. அவர் இசையை நான் பயன்படுத்தி இருக்கிறேன். மீடியாவிற்கு ரொம்பவும் நன்றி.
படத்திற்கு இன்னும் சில சிக்கல்கள் இருக்கின்றன. அதைத் தாண்டி நிச்சயமாக இந்த ‘மகுடம்’ படம் வெளிவரும். 16-ஆம் தேதி வெற்றி விழாவில் சந்திக்கிறேன். அப்போது நிறைய விசயங்களைச் சொல்கிறேன். படத்தைத் தியேட்டரில் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்”
என்றார்.









