9 லைட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் முத்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தை ஆர். கிஷோர் குமார் இயக்க, யோகி பாபு நடிக்கிறார்.
இதுவரை இல்லாத வகையில் 11 முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் இப்படத்தில் யோகி பாபு நடிக்கிறார்.
அறிமுக இயக்குநரான கிஷோர் குமார், இதற்கு முன்னர் இயக்குநர் மோகன்ராஜாவிடம் இணை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய பான் இந்தியா திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் கிஷோர் குமார்,
“பரபரப்பான காமெடி, ஆக்ஷன், திரில்லரான இப்படத்தில் நாயகன் முதல் வில்லன்வரை மொத்தம் 11 பாத்திரங்களை ஏற்று யோகி பாபு நடிக்கிறார். இதில் இரட்டையர் வேடங்களும் அடங்கும். இது மட்டுமில்லாது, பல்வேறு மொழிகளை பேசியும் நடிக்கிறார்.
ஒரு ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குகிறது. அதன் பிளாக் பாக்ஸை தேடும் பயணம்தான் இந்தப் படத்தின் கதை.
விபத்தின் காரணத்தை கண்டறிய செல்லும் நாயகன் எதிர்கொள்ளும் சவால்களை நகைச்சுவை, ஆக்ஷன் கலந்து மிகவும் விறுவிறுப்பாக கூறவுள்ளோம்…” என்றார்.
மலையாள நடிகை அதிதி ரவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், பஞ்சு சுப்பு, ஏ. வெங்கடேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஜி. பாலமுருகன் ஒளிப்பதிவு செய்ய, ‘தனி ஒருவன்’ புகழ் கோபி கிருஷ்ணா படத் தொகுப்பை கையாளுகிறார். கலை இயக்கத்திற்கு தாமு பொறுப்பேற்றுள்ளார்.
இங்கிலாந்து, கென்யா ஆகிய நாடுகளில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளது.









