full screen background image

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் திடீர் தற்கொலை

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் திடீர் தற்கொலை

பிரபல திரைப்​படத் தயாரிப்பாளர் கே.​ராஜன், இன்று மாலை 4 மணியளவில் சென்​னை​யில் அடை​யாறு ஆற்​றில் குதித்து தற்​கொலை செய்து கொண்​டார். அவருக்கு வயது 85.

கே.ராஜனின் தற்கொலை குறித்து போலீஸ் தரப்பில் பேசியபோது, “சென்னை அடை​யாறு திரு.​வி.க. பாலம் வழியாக இன்று  மாலை ஏராள​மான வாக​னங்​கள் சென்று கொண்​டிருந்​தன.

மாலை 4.25 மணி அளவில், அந்த வழி​யாகச் சென்ற கார் ஒன்று அடை​யாறு பாலத்​தில் நின்​றது. வெள்ளை முழுக்கை சட்​டை, கருப்பு நிற பேன்ட் அணிந்த முதி​ய​வர் ஒரு​வர் காரில் இருந்து இறங்​கி​னார். திடீரென பாலத்​தின் கைப்​பிடிச் சுவர் மீது ஏறிய அவர், அடை​யாறு ஆற்​றில் குதித்​தார்.

இதைக் கண்​டு, அந்த வழி​யாகச் சென்ற வாகன ஓட்​டிகள் அதிர்ச்சி அடைந்​தனர். ஆற்​றில் தத்​தளித்​தவரை மீட்க முயன்​றனர். தீயணைப்​புத் துறைக்​கும் தகவல் கொடுத்​தனர்.

மயி​லாப்​பூர், சைதாப்​பேட்​டை​யில் இருந்து 2 வாக​னங்​களில் வந்த தீயணைப்பு படை வீரர்​கள், ரப்​பர் படகு மூலம் தேடும் பணி​யில் ஈடு​பட்​டனர். சுமார் ஒரு மணி நேரத்​துக்​குப் பிறகு, முதி​ய​வர் சடல​மாக மீட்​கப்​பட்​டார்.

இதற்​கிடையே, அடை​யாறு போலீ​ஸாரும் அங்கே விரைந்து வந்​தனர். போலீஸாரின் விசாரணையில்தான் ஆற்​றில் குதித்து தற்​கொலை செய்து கொண்டது பிரபல திரைப்​படத் தயாரிப்​பாளர் கே.​ராஜன் (85) என்​பது தெரிய​வந்​தது.

போலீ​ஸார் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்​காக ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பினர். அவரது குடும்​பத்​தினருக்​கும் தகவல் கொடுத்​தனர். இப்போது அடை​யாறு போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

தயாரிப்​பாளர் கே.​ராஜனுக்கு மனை​வி, 3 மகன், ஒரு மகள் உள்​ளனர். அவர்​கள் சென்னை தண்​டை​யார்​பேட்​டை​யில் வசிக்​கின்​றனர்.

அவர்​களு​டன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு காரண​மாக ராஜன் மட்​டும் கடந்த 5 ஆண்டுகளாக நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள பாம்குரோவ் ஓட்​டலில் அறை எடுத்து தங்கி இருந்​துள்​ளார்.

நேற்று காரில் வேளச்​சேரி சென்​று​விட்டு திரும்​பும் வழி​யில் அடை​யாறு திரு.​வி.க பாலம் வந்​ததும் காரை நிறுத்​துமாறு ஓட்​டுநர் தனசேகரனிடம் கூறி​யுள்​ளார். ‘நீ காரை முன்னாடி நிறுத்து.. நான் சிறிது தூரம் காலாற நடந்து வரு​கிறேன்’ என்று தெரி​வித்​துள்​ளார்.

ஓட்​டுநர் கொஞ்ச தூரம் சென்று காரை நிறுத்​திவிட்டு காத்திருந்திருக்கிறார். அந்த நேரத்தில் சற்று தொலைவு நடந்து சென்ற கே.ராஜன் திடீரென்று ஆற்​றில் குதித்​துள்​ளார். கூவம் ஆற்றில் சேறு அதிகமாக இருந்த பகுதியில் ராஜன் குதித்ததால் சேற்றில் சிக்கிய நிலையில் மூச்சுத் திணறி அவருக்கு இறப்பு ஏற்பட்டுள்ளது.
 
கே.ராஜன் கடந்த 1983-ம் ஆண்டில் சுரேஷ் நடித்து வெளி​யான ‘பிரம்​மச்​சா​ரி​கள்’ ​படம் மூலம் தயாரிப்​பாளர் ஆனவர். மேலும்  ‘டபுள்​ஸ்’,  ‘அவள் பாவம்’,  ‘நினைக்​காத நாளில்​லை’ உள்ளிட்ட சில திரைப்​படங்​களை தயாரித்​துள்​ளார்.

‘நம்ம ஊரு மாரி​யம்​மா’, ‘உணர்ச்​சிகள்’ ஆகிய படங்​களை இயக்​கியுள்ள அவர், ‘மைக்​கேல்​ராஜ்’, ‘உளவுத்​துறை’, உட்பட பல படங்​களில் குணச்​சித்​திர வேடங்​களில் நடித்​துள்​ளார். தற்போது சென்​னை, செங்​கல்​பட்டு விநி​யோகஸ்​தர்​கள் சங்​கத் தலை​வராகவும் இருக்கிறார்.

85 வயதான இவர், சினிமா மேடைகளில் அதிரடி கருத்துகளைச் சொல்வதை வாடிக்கையாகக் கொண்டு இருந்தார். ஹீரோக்கள் அதிகச் சம்பளம் வாங்குவதால் தயாரிப்பாளர்கள் படும் கஷ்டங்கள் குறித்தும்கூட ராஜன் வெளிப்படையாகப் பேசி வந்துள்ளார்.

கடந்த சில காலமாக, தமிழ் சினிமா நிகழ்வுகள் குறித்துக் காட்டமாகப் பேசி வந்தவர் அதற்காகப் பல சர்ச்சைகளையும் சந்தித்தார்.

இவருடைய மகன் கே.ஆர். பிரபுதான் ஆர்.ஜே. பாலாஜியின் ‘எல்.கே.ஜி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடதக்கது.

தயாரிப்பாளர் கே. ராஜனின் மறைவிற்குத் தமிழ் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

 

 

Our Score