Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”.
1960-களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிடுகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் (சாய் ராம் கல்லூரி) கல்லூரியில், படக்குழுவினர் கலந்துகொள்ள, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவினில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, “பராசக்தி என்ற பெயரே மிகுந்த வலிமை கொண்டது. அந்த பெயருக்கு ஏற்றபடி, இந்தப் படமும் அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். 1960-களுக்குள் டைம் டிராவல் செய்து பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் படம் இது. மாணவர்கள் எப்போதுமே சக்தி வாய்ந்தவர்கள். அவர்கள் எந்த அளவுக்கு வலிமை கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதை இந்தப் படம் அழுத்தமாக காட்டுகிறது. படத்தின் உள்ளடக்கம் குறித்து பல கருத்துகள் வெளிவருகின்றன. ஆனால் பலரின் தியாகங்களை நாம் நேர்மறையாகவும், மரியாதையுடனும் பதிவு செய்திருக்கிறோம்.
‘கொட்டுக்காளி’ படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சிக்கு சுதா மேம் வந்திருந்தார். அப்போது அவர் எனக்கு ஒரு கதையைச் சொன்னார். அது ஒரு காதல் கதை. நான் ஏதோ பெரிய விஷயம் எதிர்பார்த்திருந்தேன். அச்சமயம் அவர் சொன்ன ஒரே ஒரு வரிதான் என்னை ஆச்சரியப்பட வைத்தது. அதற்கு மேல் சொல்ல மாட்டேன்.
பின்னர் அவர் ஸ்கிரிப்ட் புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொன்னார். உடனே என் மேனேஜரிடம், இந்தப் படத்தை நான் கண்டிப்பா பண்ணுறேன். இன்று இரவே ஸ்கிரிப்ட்டை படிச்சு முடிச்சுடுவேன்னு சொன்னேன். ஸ்கிரிப்ட்டை திறந்ததும் அது ஆங்கிலத்தில் இருப்பதை பார்த்து, மீண்டும் கால் செய்து “இதுக்கு கொஞ்சம் நேரம் தேவைப்படும்”ன்னு சொல்ல வேண்டியதாகிவிட்டது. அடுத்த நாள், ஸ்கிரிப்ட்டை முழுசா படிச்ச மாதிரி நடிச்சுட்டு போயிருந்தேன்.
சுதா மேம் ரொம்ப ஸ்ட்ரிக்ட் அப்படின்னு எல்லாரும் எனக்கு நிறைய பில்ட் அப் கொடுத்திருந்தாங்க. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போன பிறகுதான் தெரிஞ்சது, அவர் சீன்களையே ஆங்கிலத்தில்தான் விளக்குவார். அதுவும் ஷேக்ஸ்பியர் ஆங்கிலம் மாதிரி! அதை நான் சரியாக ஃபாலோ பண்ண முடியல.
ஒரு கட்டத்தில் அவர் என்னிடம் வந்து பேசினார். அப்போதுதான், “எனக்கு ஆங்கிலம்தான் பிரச்சனை… இப்போ நான் கௌதம் மேனன் சார்கூட வாழ்ற மாதிரி உணர்றேன்”னு சொன்னேன். அதை கேட்டதும், அந்த நாளிலிருந்து அவர் சீன்களை முழுக்க, முழுக்க தமிழிலேயே விளக்க ஆரம்பிச்சார். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதில் மிக முக்கியமானது கடுமையான உழைப்பு மற்றும் முழுமையான அர்ப்பணிப்பு.
ரவி சார் உங்களை பார்த்ததும் என் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்துச்சு. நான் கல்லூரியில் படிக்கும்போது உங்கள் படங்களை தொடர்ந்து பார்த்தவன். குறிப்பாக ‘எம். குமரன் S/O மகாலட்சுமி ‘படத்தில் உங்கள் உடை, ஸ்டைல் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒருநாள் சுதா மேம் வந்து, இந்த படத்தில் நடிக்க ரவி சார் ஓகே சொல்லிட்டாருன்னு சொன்னாங்க.
உடனே நான் தலைவர் மோடுக்கு போயிட்டு, எது ஜெயம் ரவியான்னு ரியாக்ட் பண்ணிட்டேன். சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தான். ஆனாலும் அதே நேரத்தில் ஒரு பெரிய ஆச்சரியமும் இருந்துச்சு. ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த் சுவாமி எவ்வளவு சக்தி வாய்ந்த வில்லனாக இருந்தாரோ, அதே மாதிரி பராசக்தியில் ரவி சார் ஒரு மிகப் பவர்ஃபுல் வில்லன் கதாபாத்திரத்தில் வருகிறார். திரையில் உங்களோடு நெருக்கமாக நடிக்கக் கிடைத்த ஒவ்வொரு நாளையும் நான் மனதார ரசித்தேன்.
ஜனவரி ஒன்பதாம் தேதி தியேட்டருக்கு வரும் ‘ஜனநாயகனை’ செலிப்ரேட் பண்ணுங்கள். 33 வருடம் திரைத்துறையில் என்டர்டைன் பண்ணவர் விஜய் சார். அவரது கடைசி படம் இந்த ‘ஜனநாயகன்’தான் என்று சொல்லி இருக்கிறார். ஆகவே ஜனவரி ஒன்பதாம் தேதி அதனை நாம் கொண்டாட வேண்டும்.
அடுத்த நாள் ஜனவரி 10-ம் தேதி நம்ம படத்திற்கு வாங்க. ‘பராசக்தி’யை கொண்டாடுங்கள். இந்த பொங்கல் கோலிவுட்டுக்கு அமேசிங்கான பொங்கல். அனைவருக்கும் தெரியும் அவரவர்கள் படத்தை அவரவர் சூப்பராக கொண்டாடுவார்கள். இன்னும் தெளிவாக சொல்கிறேன் யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்… என்னைப் பொறுத்தவரை இந்த பொங்கல் அண்ணன் தம்பி பொங்கல்…” என்றார்.
இயக்குநர் மணிரத்னம் பேசும்போது, “சுதா என்னிடம் ‘ஆயுத எழுத்து’, ‘யுவா’ என ரெண்டு படங்களில் வேலை செய்தார். அந்தப் படங்கள்ல அவங்க கண்டினியூட்டி இன்சார்ஜ்.
எப்போதும் கையில ஒரு கேமரா இருக்கும். நிறைய ஆர்ட்டிஸ்ட், நிறைய ஹீரோக்கள், நிறைய ஹீரோயின்கள்கூட வேலை பார்த்தாங்க. ஆனால், ஒரு ஆர்ட்டிஸ்ட்கூட சுதாகிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது. ஷூட்டிங் முடிஞ்சு வெளிய போனால்கூட சுதாவைத் தாண்டித்தான் போக முடியும். கண்டினியூட்டி தவறுகளைப் பார்த்துவிட்டுத்தான் விடுவாங்க.
அப்போதே சுதாவைப் பார்த்து பயப்படாத ஆர்ட்டிஸ்ட்டே கிடையாது. அப்போவே அப்படின்னா, இப்போது சொல்லவே வேண்டாம். சிவகார்த்திகேயன் ஸ்கிரிப்ட்ஸ்லாம் ரொம்ப சரியாகத் தேர்ந்தெடுக்கிறார். Wishing you a very very best” என்றதும் சிவகார்த்திகேயன் எழுந்து நின்று நன்றி தெரிவித்தார்.
நடிகை ஶ்ரீலீலா பேசும்போது, “இப்படத்தில் எனக்கு கிடைத்த இந்த மாதிரியான கதாபாத்திரத்திற்காகத்தான் நான் காத்துக்கொண்டிருந்தேன். சுதா கொங்கரா மேடம் மிக வலிமையான இயக்குநர். படபிடிப்பு தளத்தில் இயக்குநர் சுதா கொங்கரா எனக்கு அம்மா மாதிரி இருந்தார்கள். ரவி மோகன் ஆன் ஸ்க்ரீன், ஆஃப் ஸ்க்ரீனுக்கும் சம்பந்தமில்லை. அவ்வளவு இனிமையானவர். சிவகார்த்திகேயனும் மிகவும் இனிமையானவர் அவருடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவம். தமிழ் சினிமாவில் வேலை பார்க்க வேண்டும் என்பது ஆசை. இந்த படத்தை பார்த்து நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும்.” என்றார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசும்போது, “எனது பயணத்தில் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. முதல் படம் கொடுத்த வசந்த பாலனுக்கும், 100-வது படத்தைக் கொடுத்திருக்கும் சுதா மேடத்திற்கும் நன்றி. எனக்கு முதல் தேசிய விருதை வாங்கிக் கொடுத்த சுதா மேடத்திற்கு நன்றிக் கடனாகவே இந்த பராசக்தி படத்தை செய்தோம்.
இந்தப் படத்தில் ஒரு முக்கியமான விஷயம் ஒன்றை ஒளித்து வைத்து வைத்துள்ளோம். அதை பொத்தி, பொத்தி பாதுகாத்தும் வருகிறோம். இந்தப் படம் நிச்சயம் உங்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும். நீண்ட காத்திருப்புக்கு பின்னரே எனக்கு தேசிய விருது கிடைத்தது.
‘வெயில்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அசுரன்’ என பல படங்களில் தேசிய விருது தவறிதாக பலர் கேட்டார்கள். கடைசியில் சுதா கொங்கராவின் ‘சூரரைப் போற்று’ படத்தில் எனக்கு தேசிய விருது கிடைத்தது. ஒரு சகோதரியின் மூலம் தேசிய விருது கிடைத்ததாக பெருமை கொள்கிறேன்…” என்றார்.
இயக்குநர் சுதா கொங்கரா பேசும்போது, “நம் வாழ்வில் இது முடியாது என சொல்லும்போது மட்டும்தான் அதை செய்து காண்பிக்க வேண்டும் என எனது குருநாதர் மணிரத்னம் சொல்லிக் கொடுத்துள்ளார். பராசக்தியை உருவாக்க முடியாது என நினைத்தபோது, அதை செய்து காண்பிக்க வேண்டும் என தோன்றியது.
‘பராசக்தி’யை உருவாக்க எனக்கு துணை நின்ற பராசக்திகளுக்கு நன்றி. ‘பராசக்தி’யைப் பற்றி இனி நான் பேச விரும்பவில்லை. ‘பராசக்தி’யை பார்த்து நீங்கள்தான் பேச வேண்டும். நீங்கள் பேசுவது எனது பேச்சாக இருக்க வேண்டும். இந்த பொங்கலுக்கு வெளியாகும் இரு படங்களும் ஹிட் ஆக வேண்டும் சினிமாவை ரசிகர்களாகிய நீங்கள்தான் வாழவைக்க வேண்டும். அது உங்கள் கையில்தான் உள்ளது…” என்றார்.
நடிகர் அதர்வா பேசும்போது, “பராசக்தி மிகப் பெரிய அனுபவம். படப்பிடிப்பு தளத்தில் அமைக்கப்பட்ட சின்ன சின்ன பொருட்கள் அனைத்துமே அழகாக இருக்கும். குறிப்பாக ஒரு விளக்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை ஆட்டைய போட வேண்டும் என்று நினைத்து ஒரு நாள் எடுத்தும்விட்டேன். ஆனால் படபிடிப்பு தளத்தில் விளக்கை திருடிய அதர்வா என்று சொல்லி விடுவார்கள் என்று மீண்டும் அந்த விளக்கை அதே இடத்தில் வைத்துவிட்டேன்.
ஜி.வி.யின் பாடல்கள் எல்லாமே எனக்கு பிடிக்கும். இப்படத்தின் பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கும். நான் இருக்கும் இடத்தையும் என்னை சுற்றியிருக்கும் இடத்தையும், சந்தோசமாக வைத்திருப்பேன். அதை ரவி மோகனிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன்.
சிவகார்த்திகேயனை சந்திக்கும் பொழுது ஒரு நடிகராகத்தான் சந்தித்தேன். அதன் பிறகுதான் நெருங்கிப் பழகினோம். சிலரின் வளர்ச்சியை பார்க்கும் பொழுதுதான் நம் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். அப்படி பார்த்தவர்தான் சிவகார்த்திகேயன்.
அவர் ஐம்பதாவது படம், நூறாவது படம் என எத்தனை படங்கள் பண்ணினாலும் முதலில் கை தட்டுவது நானாகத்தான் இருப்பேன். பராசக்தி படம் வெளியாகும்போது அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் என்று நம்புகிறேன். சுதாவின் கல்ட் ஃபிலிம் ஆக இப்படம் இருக்கும்…” என்றார்.
நடிகர் ரவி மோகன் பேசும்போது, “நான் நாயகனாக நடிக்கும் இசை வெளியீட்டு விழாவில் பேசுவது கொஞ்சம் கூச்சமாக இருக்கும். ஆனால் எஸ்.கே. படத்தில் பேசுவது அப்படி இல்லை. பலரின் கடின உழைப்பினால் உருவாக்கப்பட்ட தங்கம்தான் இந்த பராசக்தி திரைப்படம். இந்த வருடத்தின் மிக சிறந்த படமாக இந்த பராசக்தி வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
சிவகார்த்திகேயன் எதுவுமே இல்லாமல் இது போன்ற மேடைகளில் ஆரம்பித்து தற்போது இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என்றால் இவர் அனைத்துக்கும் தகுதியானவர். அவர் இன்னும் பெரிய மேடை ஏறி பேச வேண்டும் அதற்க்கு நீங்கள்(ரசிகர்கள்) கூடவே இருக்க வேண்டும்.
பொதுவாக பல நல்ல ஆண்கள் இருக்கும் இடத்தில் ஒரு பெண் பாதுகாப்பாக உணர்வார்கள் என்று சொல்வார்கள். ஆனால் முதல்முறையாக ஒரு பெண் (சுதா கொங்கரா) இருக்கும் இடத்தில் நான் பாதுகாப்பாக உணர்ந்தேன். எந்த தடைகள் வந்தாலும் தனி ஆளாக நின்று எதிர்கொள்வது என்பது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுக்கப் போகிறது. இந்த தீயை (பராசக்தி) நிறைய பேர் அணைக்க வெளியில் முயற்சி செய்தார்கள். இந்த தீ ஆபத்தான தீயில்லை. கடவுள் முன்பு ஏற்றப்படுகின்ற அகல்விளக்கு.
“பராசக்தியில் ஏன் வில்லனாக பண்ணுகிறீர்கள்?” என்று நிறைய கேட்டார்கள். எனக்கு ரெண்டே காரணம்தான் இருந்தது. ஒன்று சுதாவின் கதை. மற்றொன்று சுதா. ஆனால் இந்த முடிவு குறித்து தற்போது நினைத்துப் பார்க்கையில் எந்த கவலையும் இல்லை.. மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. என்னை இத்தனை நாட்களாக ஹீரோவாக பார்த்தீர்கள் இனிமேல் என்னை வில்லனாக பார்ப்பீர்கள்.
இந்தப் படம் சுயமரியாதையை காப்பாற்றுகின்ற படம். நானும் என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய சுயமரியாதையை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்திருக்கிறேன். முதுகில் அடிப்பவர்களை பற்றி எனக்கு கவலை கிடையாது. கண்ணுக்கு தெரிபவர்களைப் பற்றிதான் எனக்கு கவலை.
அனைவருக்கும் ஒரு அண்ணனாக சொல்கிறேன். சுயமரியாதையை மட்டும் இழக்கக் கூடாது. இதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டால் நல்ல மனிதனாக இந்த உலகத்தில் வாழ முடியும். இப்படத்தை எல்லோரும் கொண்டாடுங்கள் நன்றி..” என்றார்.
‘பராசக்தி’ திரைப்படம் பொங்கல் கொண்டாட்டமாக வரும் ஜனவரி 10-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
















