வடலூர் J.சுதா ராஜலட்சுமி & ஜேம்ஸ் யுவன் தயாரிப்பில் ஜனா ஜாய் மூவீஸ் மற்றும் குழுவின் சார்பில் உருவாகியுள்ள படம் ‘ஆர்யமாலா’.
இந்தப் படத்தில் ‘பீச்சாங்கை’ புகழ் ஆர்.எஸ்.கார்த்தி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக மனிஷாஜித் நடித்துள்ளார்.
‘பீச்சாங்கை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஆர்.எஸ்.கார்த்திக் இந்தப் படத்தில் தெருக் கூத்து கலைஞராக நடித்துள்ளார்.
கதாநாயகியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் ‘ஆர்யமாலா’ என்கிற டைட்டில் கதாபாத்திரத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் மனிஷா ஜித். இவர் சரத்குமார் நடித்த ‘கம்பீரம்’ படத்தில் அவரது மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பின்னர் ‘விந்தை’, ‘பிழை’ உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்த அனுபவம் கொண்டவர்.
ஒளிப்பதிவு – ஜெய்சங்கர் ராமலிங்கம் , இசை – செல்வநம்பி, படத் தொகுப்பு – ஹரிஹரன், கலை இயக்கம் – சிவயோகா, சண்டை இயக்கம் – மிரட்டல் செல்வா – வீரா, நடனம் – தஸ்தா, ஆடை – சாவிஸ் S விஜய்பாபா , பத்திரிக்கை தொடர்பு – K.S.K.செல்வா.
மறைந்த பின்னணி பாடகி பவதாரிணி இந்தப் படத்தில் ‘அத்திப் பூவப்போல’ என்கிற பாடலை பாடியுள்ளார்.
1980-களில் நடக்கும் விதமாக தெருக்கூத்து கலையை மையப்படுத்தி அதன் ஊடாக ஒரு அழகான காதல் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் மூத்த ஜாம்பவான் நடிகர்களான பி.யு.சின்னப்பா, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றோர் நடித்து பிரபலமான ‘ஆர்யமாலா – காத்தவராயன்’ என்கிற புராண நாடகத்தை பின்னணியாக கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 18-ம் தேதி இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தநிலையில் இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும், தாங்கள் மேற்கொள்ள இருக்கும் வித்தியாசமான புரமோஷன் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் நாயன் ஆர்.எஸ்.கார்த்தி.
“எனக்கு தெருக்கூத்து கலைஞராக வேண்டும் என்கிற ஆர்வம் இயல்பிலேயே இருந்தது. அது மட்டுமல்ல சில வீதி நாடகங்கள் மூலமாக தெருக்கூத்தில் நடித்த அனுபவமும் இருந்தது. எனது கதாபாத்திரம் இடைவேளைக்கு பின்தான் வருகிறது என்றாலும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த கதை வலுவாக இருந்ததாலும் ஒப்புக் கொண்டு நடித்தேன்.
இந்தப் படத்தில் காதல் என்பது வெறும் பேச்சாக இல்லாமல் கண்கள் பரிமாற்றத்திலேயே நடக்கும். அதுதான் இந்தப் படத்தின் சிறப்பு.
‘காத்தவராயன்’ வேஷம் போடும் தெருக்கூத்து கலைஞனாக இதில் நடித்துள்ளேன். ஆச்சரியம் என்னவென்றால் படத்தின் இடைவேளைக்கு பிறகுதான் நான் என்ட்ரி ஆவேன். முதல் பாதி முழுவதும் கதாநாயகியை சுற்றி நிகழும் நிகழ்வுகளும் இடைவேளைக்கு பின் அவரது எண்ணங்களுக்கு உணர்வுகளுக்கு ஆறுதலாக வடிகாலாக எனது கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு சமயத்தில்தான் படத்திற்காக பணியாற்ற வந்த தெருக் கூத்து கலைஞர்களிடம் அவர்களுடைய நடை உடை பாவனைகள் குறித்து கொஞ்சம் முழுமையாக பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதுமட்டுமல்ல இந்தப் படத்தில் கூத்து கலைஞராக மறைந்த சிவசங்கர் மாஸ்டரும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் நடித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை.
கிராமங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியபோது குறிப்பாக இந்த ‘ஆர்யமாலா’ நாடகத்தை நாங்கள் நிஜமாகவே நடத்துகிறோம் என்பதாகவே உணர்ந்து அந்த கிராமத்து மக்கள் அனைவருமே பார்வையாளர்களாக வந்து அமர்ந்து தினசரி எங்களை உற்சாகப்படுத்தியது மகிழ்ச்சியாகவும் ஆச்சரியம் தருவதாகவும் இருந்தது.
வரும் அக்டோபர் 18-ம் தேதி இந்த படம் வெளியாக இருப்பதால் இதன் புரமோஷனின் ஒரு பகுதியாக, அக்டோபர் 10-ம் தேதி முதல் 15-ம் தேதிவரையிலும் தமிழ்நாட்டில் பல ஊர்களில் உள்ள திரையரங்குகளுக்கு நான் நடித்துள்ள அதே கூத்துக் கலைஞன் கெட்டப்பிலேயே சென்று இந்த படத்தை பற்றி மக்களுக்கு விளம்பரப்படுத்த முடிவு செய்து இருக்கிறேன்.
குறிப்பாக அந்த சமயத்தில்தான் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ திரைப்படம் வெளியாகும் என்பதால் அந்தப் படம் ஓடும் திரையரங்குகள் முன்பாக கூடும் ரசிகர்களிடம் எங்களது ‘ஆர்யமாலா’ படத்தை அறிமுகப்படுத்தும்போது இந்தப் படம் குறித்து ரசிகர்களுக்கு அழகாக கொண்டு செல்ல முடியும் என நினைக்கிறேன்” என்கிறார்.
Our Score









