full screen background image

இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்காவை வாழ்த்திய திரையுலக பிரபலங்கள்..!

இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்காவை வாழ்த்திய திரையுலக பிரபலங்கள்..!

‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை, வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கத்தில் படத் தயாரிப்பு குழுவின் குடும்பத்தினரால் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது.

படத்தின் டிரைலர் மட்டும் இரண்டு பாடல் வரிக் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன. அதற்கடுத்ததாக சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் தேசிங்கு பெரியசாமி, பொன்ராம், மித்ரன்.R.ஜவஹர், கார்த்திக் சுப்புராஜ், ‘சிறுத்தை’சிவா, பேரரசு, கதிர், சரண், எழில், இராஜகுமாரன், சுப்ரமணியம் சிவா, வசந்த பாலன், மிஷ்கின், R.V.உதயகுமார், P.வாசு, இயக்குநர் மற்றும் நடிகர்கள் சந்தான பாரதி, R.பார்த்திபன் K.பாக்யராஜ், ரமேஷ் கண்ணா, நடிகர்கள் ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், ஜீவா, ஜெயம் ரவி, நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜெயபிரகாஷ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி.S.தாணு, T.சிவா, சுரேஷ் காமாட்சி, தனஞ்ஜெயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முதலில் படத்தின் தயாரிப்பாளர் கே.எஸ்.ரவிக்குமாரின் அழைப்பிற்கிணங்க படத்தின் இரண்டு இயக்குநர்களில் ஒருவரான சூர்யகதிர் அவர்களை இயக்குநர் K.பாக்யராஜ் அறிமுகம் செய்து வைத்தார். இன்னொரு இயக்குநர் கார்த்திகேயன் அவர்களை இயக்குநர் P.வாசு அறிமுகம் செய்து வைத்தார்.

படத்தின் கதாநாயகனான விஜய் கனிஷ்காவை, நடிகர் ஜெயம் ரவி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் படக் குழுவினர் ஒவ்வொருவராக  அறிமுகப்படுத்தப்பட்டு வரவேற்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் K.S.ரவிக்குமார் பேசும்போது, “இந்தப் படம் உருவாவதற்கு காரணமான ரமேஷ் கிராண்ட் கிரியேஷன்ஸ் கார்த்திக், கமலக்கண்ணன், சீனிவாசன், விஜயகுமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து மரியாதை செய்கிறேன்.

எதார்த்தமாக வீட்டில் பேசும்போது “விஜய் கனிஷ்கா கதாநாயகனாக நடிக்க விரும்புகிறார். நீங்களே உங்கள் தயாரிப்பில் அறிமுகம் செய்து வையுங்கள்…” என்று அவர்கள் கூறியது இன்று உண்மையாகியுள்ளது.

முதலாவதாக ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் அவர்களுக்கு, என் மீதும் இயக்குநர் விக்ரமன் சார் மீதும் அன்பு பாராட்டி, இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஒத்துக் கொண்டு நடித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கதைக்காகவும், கதாபாத்திரத்துக்காகவும் ஒத்துக் கொண்டு நடித்துக் கொடுத்தமைக்காக கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சமுத்திரக்கனி இருவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்ட சித்தாரா அவர்களுக்கும் மிக்க நன்றி.

துணைக் கதாப்பத்திரங்களில் நடித்த அனைவருக்கும் மிக்க நன்றி. என்னதான் என்னுடைய உதவி இயக்குநர்களையே இந்த திரைப்படத்தின் இயக்குநர்களாக பணிபுரிய வைத்தாலும் அவர்கள் திரைக்கதையை சிறப்பாக உருவாக்கினார்கள். அதேபோல் அவர்கள் எப்படி பணிபுரிகிறார்கள் என்று சரத்குமார் மற்றும் கௌதம் இருவரிடமும் கேட்டு தெரிந்து கொண்டேன். இங்கு வந்து வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் தேசிங்கு பெரியசாமி பேசும்போது, “பலவித தடைகளுக்கு நடுவே உருவாகி இருக்கும் இப்படத்தின் தரம் டிரைலரை பார்க்கும்போதே தெரிகிறது. விஜய் கனிஷ்கா கதாநாயகனாக நடித்திருப்பதைவிட, கதாபாத்திரத்திரமாக வாழ்ந்திருக்கிறார். சரத்குமார், கௌதம் மேனன் போன்றோரின் நடுவே சிறப்பாகவும் நடித்திருக்கிறார். கண்டிப்பாக இத்திரைப்படம் வெற்றியடையும் என்று வாழ்த்துக்கிறேன்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, “இவ்விழாவை ஒரு குடும்ப விழாவாகவே பார்க்கிறேன். முன்னணி திரைப்பட நிறுவனங்களைப் போலவே சூப்பர்குட் ஃபிலிம்ஸ் போன்ற மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் தலைசிறந்த இயக்குநர் விக்ரமன்.

அவருக்கு தனது குரு பக்தியை காண்பிக்கும்விதமாக அவரது மகனை வைத்து படம் தயாரித்துள்ளார் K.S.ரவிக்குமார் அவர்கள். விக்ரமன் மற்றும் K.S.ரவிக்குமார் ஆகியோரின் அன்பிற்குப் பாத்திரமாக இந்த படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். ஒரு வெற்றிகரமான கதாநாயகனாக வருவார் விஜய் கனிஷ்கா. மேலும், இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடையும்” என்றும் வாழ்த்தினார்.

தயாரிப்பாளர் கலைப்புலி.S.தாணு பேசும்போது, “இயக்குநர் விக்ரமன் அவர்கள் இயக்கிய திரைப்படங்களும் K.S.ரவிக்குமார் இயக்கிய திரைப்படங்களும் தயாரிப்பாளர்களுக்கு நல்ல வருவாய் ஈட்டி தந்தது. நீங்கள் இருவரும் செய்த சாதனைகள் விஜய் கனிஷ்காவுக்கும் வந்து சேரும் என்று நான் வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகர் ‘ஜெயம்’ரவி பேசும்போது, “இயக்குநர் K.S.ரவிக்குமார் மற்றும் விக்ரமன் அவர்களின் அன்பிற்காகத்தான், இங்கே இவ்வளவு இயக்குநர்கள் வந்துள்ளார்கள். இருவருமே இந்திய சினிமாவின் சிறந்த ஆளுமைகள். அவர்களின் பெயரை காப்பாற்றி இந்திய சினிமாவில் ஒருவராக விஜய்கனிஷ்கா வருவார் என்று நான் நம்புகிறேன். நான் அறிமுகம் ஆகும்போது எப்படி ஒரு ஆதரவு எனக்கு கிடைத்ததோ, அதேபோல உங்களுக்கும் கிடைத்துள்ளது. அதேபோல உங்களை நான் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது. இரட்டை இயக்குநர்களாக இருப்பதற்கு அவர்களையும் வாழ்த்துகிறேன். வெற்றிப் படம் என்பது இப்போதே தெரிகிறது. இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகர் ஜீவா பேசும்போது, “K.S.ரவிக்குமார் மற்றும் விக்ரமன் ஸார் இயக்கத்திலும் நான் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளேன். இது ஒரு குடும்ப விழா. நான் அறிமுகமாகும்போதும் என்னை வாழ்த்த இதேபோல அனைவரும் வந்திருந்தனர். ஆளும் என்னாலும் சிறந்த படங்களை தர முடிந்தது. இவர்களின் வாழ்த்து  உங்களுக்கு மிகப் பெரிய வாழ்த்தாக அமையும். நீங்களும் மேன்மேலும் வளருவீர்கள் என்று வாழ்த்துகிறேன். இயக்குநருக்கும், RK Celluloids-க்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசும்போது, “விஜய் கனிஷ்கா, இசையமைப்பாளர் C.சத்யா மற்றும் இயக்குநர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல என்னுடைய இரண்டாவது திரைப்படமான ‘ஜிகர்தண்டா’ வெளியாவதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் விக்ரமன் சார் மற்றும் R.K.செல்வமணி அவர்கள். இந்த நேரத்தில் அதற்காக அவர்களுக்கு இந்த இடத்தில் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் K.பாக்யராஜ் பேசும்போது, “இது ஒரு இசை வெளியீட்டு விழாவாக அல்லாமல் நன்றி தெரிவிக்கும் விழாபோல் உள்ளது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் R.B.சௌத்ரி அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். இந்த மாதிரியான இயக்குநர்களை அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவுக்கு சேவை செய்துள்ளார். திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. விஜய் கனிஷ்காவிற்கும் திரைப்படம் வெற்றியடையவும் வாழ்த்துகிறேன்..” என்றார்.

இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, “தலைசிறந்த ஒரு அரசனின் பெயரை தன் மகனுக்கு சூட்டியுள்ளார். விக்ரமன் ஸார் இயக்கிய படங்களின் தலைப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய் கனிஷ்காவிற்கு இந்த அளவுக்கு ஆதரவு இருப்பது வரவேற்கத்தக்கது. விஜய் கனிஷ்காவிற்கும், இயக்குநர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன். ரசிகர்கள் அனைவரும் திரைப்படத்தை திரையரங்கில் சென்று பார்க்க வேண்டுகிறேன்” என்றார்.

‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் பேசும்போது, “இயக்குநர் K.S.ரவிக்குமார் மற்றும் விக்ரமன் இருவரும் என் வாழ்வில் முக்கியமான நபர்கள். அவர்கள் எனக்கு மறக்க முடியாத தருணங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். இவர்கள் என்றும் என் வாழ்நாளில் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான். எவ்வளவோ பிரச்சினைகள் எனக்கும் K.S.ரவிக்குமார் அவர்களுக்கும் வந்தாலும், அவர் ஒரு தங்கமான மனிதர். இது ஒரு குடும்ப விழா. விஜய் கனிஷ்கா மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் C.சத்யா அவர்களும் சிறப்பான இசையை கொடுத்துள்ளார். இந்த ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்த மேடையே ஒரு பாசிட்டிவான மேடையாக உள்ளது. அண்ணன் K.பாக்யராஜ் அவர்கள், பார்த்திபன், விக்ரமன், K.S.ரவிக்குமார் இவர்களையெல்லாம் பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது. விக்ரமன், K.S.ரவிக்குமார் இருவருமே தயாரிப்பாளர்களின் இயக்குநர்கள். இந்தப் படத்தில் அவர்கள் இணைந்திருப்பது நட்பு ரீதியானது. விஜய் கனிஷ்கா அவர்களின் நடிப்பு சிறப்பாக உள்ளது. அவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. இந்த படம்  வெற்றியடைய பத்திரிக்கை நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறேன்” என்றார்.

இயக்குநர் R.V.உதயகுமார் பேசும்போது, “நான் இயக்குநர் K.S.ரவிக்குமார் மற்றும் இயக்குநர் விக்ரமன் ஆகியோருடன் சமகாலத்தில் பயணித்து ஒன்றாக பழகியவர்கள். இயக்குநர்கள் சங்கம் சிறப்பாக செயல்பட விக்ரமன் அவர்களும் ஒரு காரணம். பலவித குடும்ப சூழலுக்கு நடுவே தன் மகனை சினிமாத் துறையில் சரியாக தடம் பதிக்க வைத்துள்ளார். ‘ஹிட் லிஸ்ட்’ என்ற இத்திரைப்படத்தை வெற்றியடையச் செய்ய வேண்டியது ரசிகர்களாகிய, உங்கள் கையில் உள்ளது..” என்றார்.

இயக்குநர் விக்ரமன் பேசும்போது, “நான் பேச வேண்டியதை K.S.ரவிக்குமாரே பேசிவிட்டார். இந்தப் படத்தை தயாரித்ததற்கு அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு அப்பாவாக அல்லாமல், ஒரு இயக்குநராக சொல்கிறேன், இந்தப் படத்தில் விஜய் கனிஷ்கா சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றியடையும். அவர் மேன்மேலும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்..” என்றார்.

Our Score