இந்தியாவின் முன்னணி ஒடிடி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதை சொல்லியான ZEE-5, மிகவும் எதிர்பார்ப்பிலுள்ள தமிழ் சீரிஸான ‘தலைமைச் செயலகம்’ சீரிஸின் டீசரை இன்று வெளியிட்டுள்ளது. அதிகாரத்தின் கோரத்தைப் பற்றிப் பேசும் அழுத்தமான அரசியல் திரில்லராக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.
இந்த சீரிஸை, ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமாருடன் தயாரித்துள்ளார். கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கியுள்ளார். இந்த சீரிஸ் 8-எபிசோடுகளாக வெளிவரவுள்ளது.
இது தமிழ்நாட்டின் அரசியல் களத்தின் பின்னணியில் லட்சியம், துரோகம் மற்றும் போராட்டம் மிகுந்த ஒரு பெண்ணின் அதிகார வேட்கையின் கதையைச் சொல்கிறது.
தமிழக அரசியல் களத்தின் பின்னணியில் நடக்கும் கதையில், முதல்வர் அருணாசலம் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார், இந்த விசாரணையால் அவரைச் சுற்றியுள்ளவர்கள் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுவதோடு அதற்காகத் தீவிரமாக இயங்க ஆரம்பிக்கிறார்கள்.
இதற்கிடையில், ஜார்க்கண்டில் உள்ள ஒரு தொலைதூர சுரங்க கிராமத்தில், சி.பி.ஐ. அதிகாரி நவாஸ்கான் இரண்டு தசாப்தங்கள் பழமையான கொலை வழக்கை ஆராய்கிறார்.
பரபரப்பான சென்னையில், புறநகர்ப் பகுதியில் கிடைக்கும் துண்டிக்கப்பட்ட கை மற்றும் தலையினை குறித்து டி.ஜி.பி. மணிகண்டன் ஒரு பயங்கரமான கண்டுபிடிப்பு குறித்து விசாரணையைத் தொடங்குகிறார்.
இந்தக் கதை விரிய, விரிய வேறுபட்ட பல நிகழ்வுகளை ஒன்றிணைகின்றது, காலத்தால் மறைக்கப்பட்ட மறந்துபோன உண்மைகளின் மீது ஒளி பாய்ச்சுகிறது.
இத்தொடர் பற்றி ராடான் மீடியா வொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் கூறுகையில், “இந்த தலைமைச் செயலகம்’ சீரிஸை உலகம் முழுவதும் ZEE5 உடன் இணைந்து வெளியிடுவது மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது.
இந்த சீரிஸ் தமிழக அரசியலின் தீவிரமான பக்கத்தைப் பேசுவதுடன், தேசிய அளவிலான அடித்தட்டு தொழிலாளர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் பக்கங்களை நுணுக்கமாகப் பேசுகிறது.
அரசியல் மரபுகளுக்குக் கட்டுப்படாத ஒரு பெண்ணின் எழுச்சியை எதிரொலிக்கும் கதைதான் இந்த ‘தலைமைச் செயலகம்’. இந்த சீரிஸ் அரசியல் சித்தாந்தங்களை வடிவமைப்பதில் பெண்களின் முக்கிய பங்கைச் சித்தரிக்கிறது.
கொற்றவை, துர்கா மற்றும் அபிராமி ஆகியோரின் கதைகளை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதன் மூலம், ஒரு பெரும் உரையாடலைத் தூண்டுவதையும், அரசியல் பற்றிய புரிதலை உண்டாக்குவோம் என நம்புகிறேன்..” என்றார்.
இயக்குநர் வசந்தபாலன் இத்தொடர் குறித்து கூறுகையில், “அரசியல் அரங்கில் உலக விதிகள் எதுவும் பொருந்தாது. மத்திய அரசு, மாநில அரசுகளின் குரல்களைக் கூர்ந்து கவனிக்கும்போது, மாநிலத்தின் அடிப்படைத் தேவைக்கான குரலாக அவை மாறிவிட்டன என்பதைப் புரிந்து கொள்ளும்போது புதிய அரசியல் பிறக்கும்.
சுயாட்சி, மாநில தன்னிறைவு மற்றும் மக்கள் உரிமைகள் போன்றவற்றில், ஊழல், ஊழலின் ஆபத்துகள், ஜனநாயகப் போராட்டத்தின் சமரசங்கள் போன்றவற்றால் கறை படிந்த அரசாக, தன் மாநில மக்களின் நலனைக் காக்கும் அரசைப் பார்க்கும் முயற்சிதான் தலைமைச் செயலகம். ஒரு மாநில முதலமைச்சரின் பார்வையில் ஆயுதப் போராட்டங்களின் ஆபத்துக்களைப் பற்றிப் பேசுகிறது இந்தக் கதை” என்றார்.
கொற்றவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஸ்ரேயா ரெட்டி கூறுகையில், “இந்த ‘தலைமை செயலகம்’ தொடரின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், மேலும் Zee5 உடன் இணைந்து இந்த சுவாரஸ்யமான கதையைப் பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
‘நாம் எதிரிக்கு எதிராகக் கத்தியுடன் நின்றால், அவர்கள் பல கத்திகளால் திருப்பி அடிப்பார்கள்’ என்ற கொற்றவையின் மேற்கோள் அவரது கதாபாத்திரத்தின் தன்மையைச் சொல்லிவிடும்.
அமைதியான குணம், தன்னம்பிக்கை மற்றும் உள்ளுணர்வுகள் மூலம் ஸ்திரமற்ற அரசியலைக் கணிக்கும் அவள், ஆபத்தான நட்புகளைத் தாண்டி, தமிழக அரசியலில் பயணிக்கிறாள். தமிழக அரசியலின் முகத்தை விவரிக்கும் இந்தக் கதையை ZEE-5-ல் ரசிகர்களுடன் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.
இந்த ‘தலைமைச் செயலகம்’ வெப் சீரீஸ் வரும் மே 17-ம் தேதியன்று ZEE-5 ஓடிடி தளத்தில் திரையிடப்படுகிறது..!











