சீரடி சாய் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.ராஜசேகர், எஸ்.ஸ்வாதி இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், பரத் போபண்ணா, அபிஹாசன், நிமிஷா சஜயன், பேபி இயல், விராஜ், ஜேஷன் ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வசனம், இயக்கம் – விஜய், இசை – ஜி.வி.பிரகாஷ்குமார், கதை, திரைக்கதை – ஏ.மஹாதேவ், நடன இயக்கம் – சந்தீப் கே.விஜய், படத்தொகுப்பு – ஆண்டனி, சண்டை இயக்கம் – ஸ்டன்ட் சில்வா, கலை இயக்கம் – சரவணன் வசந்த், ஆடை வடிவமைப்பு – ருச்சி முனோத், உடைகள் – மோடிபல்லி ரமணா, ஒப்பனை – பட்டணம் ரஷீத், ஒலி வடிவமைப்பு – எம்.ஆர்.ராஜகிருஷ்ணன், VFX – Dnote, புகைப்படங்கள் – ஆர்.எஸ்.ராஜா, பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன்.
லைகா நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்திய காஷ்மீருக்குள் உமர்பாய் என்ற அதிபயங்கர தீவிரவாதி தலைமையில் சில தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாகத் தகவல் தெரிய வருகிறது.
இவர்களின் நோக்கம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி-20 உலகத் தலைவர்களின் மாநாட்டின்போது தீவிரவாதத் தாக்குதல் நடத்துவதுதான். இதையறியும் காஷ்மீரில் இருக்கும் ராணுவம் வீடு, வீடாக சோதனையிடும்போது தீவிரவாதிகள் சிக்கிக் கொள்கிறார்கள். இதனால் அந்தத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு உமர்பாய் லண்டனுக்குக் கிளம்புகிறான்.
கோயம்புத்தூர் மத்திய சிறையில் ஜெயிலராக இருக்கிறார் குணசேகரன் என்ற அருண் விஜய். அதே சிறையில் இருக்கும் ஒரு முஸ்லீம் தீவிரவாதி தப்பிக்க முயலும்போது அவன் பிடிபடுகிறான். அப்போது உமர்பாய் அருண் விஜய்க்கு போன் செய்து அந்தக் கைதியை மட்டும் விட்டுவிடும்படி சொல்கிறான். ஆனால் அருண் விஜய் மறுக்க.. அருண் விஜய்யின் மனைவியை ஒரு குண்டு வெடிப்பில் கொல்கிறான் உமர் பாய்.
இதனால் கோபமடையும் அருண் விஜய் அந்தக் கைதியை கொலை செய்துவிடுகிறார். மேலும் அந்த குண்டு வெடிப்புத் தாக்குதலில் படுகாயமடைந்திருக்கும் தனது மகளுக்கு உயர் மருத்துவ சிகிச்சையளித்து காப்பாற்ற லண்டனுக்கு அழைத்துச் செல்ல வேண்டி தனது பணியில் இருந்து ராஜினாமா செய்கிறார்.
அருண் விஜய் லண்டனுக்கு தனது மகளுடன் வந்து அவளை மருத்துவமனையில் சேர்ப்பிக்கிறார். மகளது மருத்துவச் செலவுக்காக ஹவாலா முறையில் 30 லட்சம் ரூபாயை ஏற்பாடு செய்து லண்டன் வந்திருக்கிறார் அருண் விஜய்.
அந்தப் பணத்தை வாங்குவதற்காகப் போகும்போது திருடர்களுடன் அருண் விஜய்க்கு அடிதடி ஏற்படுகிறது. அப்போது லண்டன் போலீஸ் வர.. அவர்களுடன் அருண் விஜய் சண்டையிடுகிறார். இதனால் அருண் விஜய் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறார்.
அதே நேரம் லண்டனில் இருக்கும் உமர் பாய் அதே சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டுகளை தயாரிப்பதில் எக்ஸ்பெர்ட்டான தனது கூட்டாளிகள் மூவரை விடுவிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறான்.
இதற்காக சிறையின் பாதுகாப்பு சிஸ்டம் முழுவதையும் ஹேக் செய்து உமர்பாய் வழிகாட்ட, தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்கின்றனர். இது உமர்பாயின் சதி வேலை என்பதையறிந்த அருண் விஜய் இதைத் தடுக்க சிறை அதிகாரியான எமி ஜாக்சனுடன் இணைந்து நிற்கிறார். அதன் பின் நடப்பது என்ன என்பதுதான் இந்தப் படத்தின் மீதிக் கதை.
நாயகன் குணசேகரனாக அருண் விஜய் தனது பண்பட்ட நடிப்பைக் காண்பித்திருக்கிறார். ஆக்சன் ஹீரோவுக்கே உரித்தான பில்டப் காட்சிகளோடு தனது தனித்துவத்தைக் காட்டும்விதமாக சண்டை காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார்.
மகள் மீதான பாசம்.. நோயில் இருந்து விடுவிக்க பாடுபடும் பரிதவிப்பு, தெரியாத இடத்தில் மாட்டிக் கொண்டு அல்லல்படும் அவஸ்தை.. கடைசியாக தனது தாய் நாட்டுப் பற்றுக்காக தனது மகளையே உயிர்ப்பலி கொடுக்க துணியும் தைரியம்.. என்று பலவற்றையும் தனது நடிப்பில் கரை சேர்த்திருக்கிறார் அருண் விஜய்.
பையா.. பையா என்று அருண் விஜய்யை அழைத்தபடியே படம் நெடுகிலும் வலம் வந்து கடைசியாக பரிதாபமாக உயிரைவிடும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் அபிஹாசனுக்கு ஒரு ஜே போடலாம். அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சும், அவருடைய நடிப்பும்தான் படத்தின் பிற்பாதியில் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம்.
இதேபோல் மலையாளி நர்ஸாக நடித்திருக்கும் நிமிஷா சஜயன் இயல்பான நடிப்பும், குழந்தையைப் பார்த்துக் கொள்ளத் துடிக்கும் அன்பை வெளிக்காட்டியவிதமும் சிறப்பு.
வில்லனாக நடித்திருக்கும் பரத் போபண்ணாவுக்கு கோப, ஆவேச பேச்சுக்களுடன் கூடிய நடிப்பே கிடைத்திருக்கிறது. டெர்ரர் ஜெயிலர் என்ற பில்டப்பில் அறிமுகமாகும் எமி ஜாக்சனை கடைசியாக அருண்விஜய்தான் காப்பாற்றுகிறார். பேபி இயலின் அழகு நடிப்பும் கொஞ்சம் மனதைத் தொட்டுவிட்டது.
சந்தீப் கே.விஜய்யின் ஒளிப்பதிவில் லண்டன் காட்சிகள் ஜோராய் இருக்கிறது. ஜெயில் காட்சிகள் பெரும்பாலும் இரவு நேரத்திலேயே படமாக்கப்பட்டிருப்பதால் அத்தனையும் சிறப்பு. சண்டை காட்சிகளை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் ஸ்டண்ட் சில்வா. பின்னணி இசையில் வழக்கம்போல மிரட்டியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
படத் தொகுப்பாளர் ஆண்டனி அனைத்து சண்டை காட்சிகளையும் ஒன்றன் பின் ஒன்றாக தொகுத்தளித்திருக்கும்விதம் பாராட்டுக்குரியது.
இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் அனைத்து படங்களிலும் இயக்கம் சிறப்பாகத்தான் இருக்கும். ஆனால் கதை, திரைக்கதை, வசனம்தான் சாதாரணமாக இருக்கும். இதிலும் அப்படியே..!
நார்கோ அனலிஸ்ட் டெஸ்ட் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனையை நடத்தும் அதிகாரம் வழக்கினை பதிவு செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மட்டுமே உண்டு. அதுவும் அந்த நபரிடம் கேட்கப் போகும் கேள்விகளை முன்கூட்டியே அந்த நபரிடம் கொடுத்து அவரது ஒப்புதலையும் பெற்று கோர்ட்டில் சமர்ப்பித்தால்தான் இந்த டெஸ்ட்டுக்கு அனுமதியே கிடைக்கும்.
போகிறபோக்கில் ஒரேயொரு வசனத்தில் சொல்லி முடித்து அடுத்தக் காட்சியிலேயே இந்த டெஸ்ட்டை ஜெயிலுக்குள்ளேயே தன் கண் பார்வையிலேயே அருண் விஜய் பார்க்கிறார் என்பதெல்லாம் பூ சுற்றும் திரைக்கதை. காஷ்மீர் வரைக்கும் யோசித்த இயக்குநர் இதையும் கொஞ்சம் யோசித்திருக்கக் கூடாதா..
லண்டன் ஜெயில் முற்றுகை, மற்றும் தாக்குதல் காட்சிகளில் நம்பகத் தன்மை இல்லை. நம்மூர் மாதிரியே படத்தின் கிளைமாக்ஸில் லண்டன் போலீஸும் வந்து சேர்வதெல்லாம் காமெடி ரகம்..!
தேசப் பற்று மிக்க அப்பா, கடைசியில் தனது மகளையே நாட்டுக்காகப் பலி கொடுக்க முனைகிறார் என்னும் அளவுக்கு ஹீரோவின் தேசபக்தியை வெளிப்படுத்தும் இயக்குநர், அதே ஹீரோ ஹவாலா பணம் மூலமாக தேசத்திற்கெதிராக பொருளாதாரக் குற்றத்தை மிக அலட்சியமாகச் செய்யத் துணிகிறார் என்று ஏன் திரைக்கதை அமைத்தார் என்று தெரியவில்லை. இந்த ஒரு விஷயத்திலேயே ஹீரோவின் டோட்டல் இமேஜும் சரிந்துவிட்டது.
அப்பா-மகள் பாசம், இந்தியா என்ற தேச பக்தி இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்து அருண் விஜய் என்ற ஆக்சன் ஹீரோ மூலமாக அதை செயல்படுத்த நினைத்திருக்கிறார் இயக்குநர் விஜய். இதில் பாதிதான் ஜெயித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
“எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று இல்லாததுபோல இருக்கே..!?” என்று ஒரு சாதாரண ரசிகன் தியேட்டர் வாசலில் சொல்லிவிட்டுப் போவானே.. அது இந்தப் படத்துக்கும் பொருந்தும்..!
RATING : 3 / 5









