இயக்குநர் பாலாவின் தயாரிப்பில், ஆர்.கே.சுரேஷ், பூர்ணா, பக்ஸ், மாரிமுத்து, இளவரசு, மதுஷாலினி மற்றும் பலரின் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் எம்.பத்மகுமார் இயக்கத்தில் உருவான படம் ‘விசித்திரன்’.
சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பிரபலங்களுக்கான சிறப்பு காட்சி நடைபெற்றது. அப்போது பிரபலங்கள் இந்தப் படம் பற்றிய தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
‘பிக்பாஸ்’ பிரபலம் பாலாஜி முருகதாஸ் பேசியபோது, “இப்படிப்பட்ட ஒரு கதையை நான் ஆர்.கே.சுரேஷ் அண்ணனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. நானே திரைப்படத்திற்குள் பயணிப்பது போல் உணர்ந்தேன். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எதிர்பாராதவிதத்தில் இருந்தது. ஆர்.கே.சுரேஷ் அண்ணனின் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டியதில்லை பிரமாதமாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் சமூகப் பிரச்சனையை பற்றி பேசியுள்ளார்கள். தற்போதய காலக் கட்டத்திற்கு தேவையான ஒரு படமாக இதை பார்க்கிறேன். படக் குழுவினர் அனைவர்க்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்…” என்றார்.
‘பிக்பாஸ்’ பிரபலம் ஷிவானி நாராயணன் பேசியபோது, “நான் எந்த எதிர்பார்ப்புடனும் வரவில்லை. ஆனால் இப்போது நான் பல சுவாரஸ்யமான தருணங்களுடன் செல்கிறேன். ஆர்.கே.சுரேஷ் அண்ணன் மிக சிறப்பாக நடித்துள்ளார். செண்டிமெண்ட் காட்சிகளில் அவரின் கண் மட்டும் ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதை கண்டு வியப்படைந்தேன். அதே போல் நடிகை பூர்ணாவும் சிறப்பாகவே நடித்துள்ளார்..” என்றார்.
பிக்பாஸ் பிரபலம் தாமரை பேசியபோது, “மிகவும் மன வேதனையுடன் நான் இப்படத்தை பார்த்தேன். கிளைமாக்ஸ் காட்சிகள் கண்கலங்க செய்தது. மக்கள் அனைவரும் இப்படத்தை திரையில் வந்து பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். படத்தில் நடித்த அனைவரும் மிக சிறப்பாக நடித்துள்ளனர்…” என்றார்.
விஜய் டிவி பிரபலம் சரத் பேசியபோது, “எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஆர்.கே.சுரேஷ் அண்ணனின் நிறைய படங்களை பார்த்துள்ளேன். இப்போது ஒரு படத்தில் அவருடன் இனைந்து நடித்திருக்கிறேன். அவர் இதுவரை நடித்த படங்களில் முரட்டுத்தனமாகவும், வில்லனாகவும்தான் நடித்துள்ளார். ஆனால் இப்படத்தில் சாந்தமாகவும், பொறுமையாகவும் நடித்திருப்பது வியப்பாக இருக்கிறது. நடிப்பை கண்டபோது படத்தை நான் என்னையே மெய்மறந்தது பார்த்தேன். இப்படிப்பட்ட ஒரு படைப்பை தமிழ் சினிமாவிற்கு வழங்கியதற்காக இயக்குநர் பாலா அவர்களுக்கும் நன்றி. மேலும், இது போன்ற நல்ல படங்கள் தமிழ் சினிமாவில் வர வேண்டும் என நினைக்கிறன்…” என்றார்.
விஜய் டிவி பிரபலம் பாலா பேசியபோது, “அண்ணன் ஆர்.கே.சுரேஷ் என்னுடன் நடித்ததைவிட என்னை அடித்ததே அதிகம். இப்படத்தின் கிளைமாக்ஸ்காக ஐமேக்ஸில் 5 முறை இந்த படத்தை பார்க்கலாம். ஸ்க்ரீன் பிலே பேஸ்ட்டு… படம் முழுக்க ட்விஸ்ட்டு. அனைவரும் விசித்திரன் திரைப்படத்தை கண்டு மகிழுங்கள்” என்றார்.
பிக்பாஸ் பிரபலம் ஜூலி பேசியபோது, “இந்தப் படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஆர்.கே.சுரேஷ் மற்றும் பூர்ணா இருவரையும் வித்தியாசமான பரிமாணத்தில், எதார்த்த கதையுடன் திரையில் பார்க்கலாம். சில படங்கள்தான் நம் மனதில் நிற்கும். அப்படியான படம்தான் இந்த ‘விசித்திரன்’. ஆர்.கே.சுரேஷுக்குள் இப்படிப்பட்ட நடிகன் ஒருவர் ஒளிந்திருக்கிறார் என்று எனக்கு தெரியாது. அவர் அட்டகாசமாக நடித்துள்ளார். பூர்ணா மிகவும் அழகாக இருக்கிறார்…” என்றார்.
நடிகர் ஷா ரா பேசியபோது, “மலையாளத்தில் வெளியான ‘ஜோசப்’ படத்தை நான் 4 முறை பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த படம் அது. அதேபோல் நடிகர் ஜோஜு ஜார்ஜ் அவர்களையும் எனக்கு பிடிக்கும். அவர் நடித்த ‘ஜோஸப்’ படத்தின் ரீமேக் என்பதால்தான் நான் இப்படத்தை பார்க்க வந்தேன். அந்தப் படத்தின் அழகை அப்படியே படமாகியுள்ளார்கள்.
ஆர்.கே.சுரேஷ் அவர்களை இதுவரையிலும் முரட்டுத்தனமான வில்லனாகவே பார்த்து பழகிவிட்டோம். ஆனால், இப்படத்தில் அவர் அழகாக நடித்திருக்கிறார். அது மட்டுமின்றி அவரின் கண்களை நடிக்க வைத்திருக்கிறார்…” என்றார்.
நடிகை இந்திரஜா ரோபோ ஷங்கர் பேசும்போது, “முன்பெல்லாம், ஆர்.கே.சுரேஷ் அண்ணனை பார்க்கும்போது பயமாக இருக்கும். வில்லனாகவே பார்த்து பழகிப்போன ஒருவர் அவர் இப்படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. வயதான கதாபாத்திரத்தில்கூட பூர்ணா அவர்கள் இவ்வளவு அழகாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் பாலா அவர்களுக்கு இப்படத்தை தயாரித்ததற்கு நன்றி. இப்படிப்பட்ட ஒரு படைப்பை எடுத்ததற்கு இயக்குனர் எம். பத்மகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். காவல் துறையில் இருக்கும் ஒரு காவலாளியின் கதை இது. காவலர் அனைவர்க்கும் இப்படம் சமர்ப்பணமாகும்…” என்றார்.
நடிகை ஆர்த்தி கணேஷ் பேசியபோது, “மிக சிறந்த படம் இது. ஆர்.கே.சுரேஷ் தனித்துவமான ஒரு நடிப்பை நடித்திருக்கிறார். பூர்ணா அழகாக இருக்கிறார். இயக்குநர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மலையாளத்தில் வந்த படத்தை தமிழுக்கு ஏற்றவாறு ரீமேக் செய்துள்ளார். இது படம் அல்ல பாடம் என்றே சொல்லாம். அனைவரும் ‘விசித்திரன்’ படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்…” என்றார்.
நடிகர் கணேஷ் பேசியபோது, “இப்படிப்பட்ட ஒரு உன்னதமான படைப்பில் நான் நடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆர்.கே.சுரேஷ், பூர்ணா என்று படத்தில் யாருமே நடிக்கவில்லை. அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். கண்டிப்பாக அனைவரும் இந்தப் படத்தை திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கண் கலங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அனைவரின் கண்களையும் கலங்கச் செய்யும் வெற்றி படம் இது…” என்றார்.
நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசியபோது, “தயவு செய்து மலையாளம் மற்றும் தமிழ் படத்தை ஒப்பிட வேண்டாம். ஜோஜு ஜார்ஜ் தனது உச்சபட்ச நடிப்பை அதில் கொடுத்துள்ளார், நான் முயற்சி செய்திருக்குறேன். அவ்வளவுதான். இதற்காக என் இயக்குநர் எம்.பத்மகுமாருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.
மோகன்லால் சார் மற்றும் மம்முட்டி சார் ஆகியோரை இயக்கிய ஒரு சிறந்த இயக்குநர் அவர். அவர் என்னிடம் முக பாவனைகளைக் கொண்டு நடிக்கச் சொன்னார். கடவுளின் கிருபையால் அனைத்தும் நல்லபடியாக அமைந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையில் அவரின் முழு உழைப்பையும் போட்டிருக்கிறார்.
அடுத்ததாக எனது சக நடிகை பூர்ணாவுக்கு எனது வாழ்த்துகள். மேலும் அவர் தமிழில் இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் நயன்தாராவைப் போல் பிறப்பின் மூலமே ஒரு கலைஞர்தான். மேலும், என் குருநாதர் பாலாவிற்கு பாலாவிற்கு என்னை வைத்து ஒரு படம் தயாரித்ததற்காக நன்றி தெரிவிக்க வேண்டும்…” என்றார்.
நடிகை பூர்ணா பேசியபோது, “ஒரு படத்தை மீண்டும் உருவாக்குவதற்கு இரட்டை பதற்றம் இருக்கும். ஆனால் இவர்கள் அதை ஒரு புத்திசாலித்தனமான வழியில் கையாண்டுள்ளனர். ‘ஜோசப்’ ஒரு ஹீரோயிஸ படம். அதையே இந்த ‘விசித்திரனிலும்’ உணர முடிந்தது. ஆர்.கே.சுரேஷ் அதிகபட்சமாக நடித்துள்ளார். பல காட்சிகளில் நான் இருந்ததால் அவருடைய நடிப்பையும் பார்த்திருக்கிறேன். சில சென்டிமென்ட் காட்சிகளில் நான் மிகவும் அழுதேன். அவரது நடிப்பு இந்த படத்திற்கு ஒரு பெரிய முதுகெலும்பாக இருந்தது.
இயக்குநர் எம். பத்மகுமார் படத்தை நேர்த்தியாக கையாண்டுள்ளார். அவரைத் தவிர வேறு எந்த இயக்குநரும் இந்தப் படத்தை சிறப்பாக இயக்க முடியாது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்ற எண்ணத்துடனே இதனை நாட்கள் காத்திருந்தோம். இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாவதை நாங்கள் விரும்பவில்லை. தற்போது எங்கள் காத்திருப்புக்கு பலன் கிடைத்தது போல் உள்ளது. அனைவரும் இந்த படத்தைப் பார்த்து உங்களின் கருத்துக்களை சொல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நன்றி…” என்றார்.
















