‘மைனா’, ‘சாட்டை’, ‘மொசக்குட்டி’, ‘சவுகார்பேட்டை’, ‘பொட்டு’ ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஜான் மேக்ஸ் அடுத்து ஒரு புதிய படத்தைத் தயாரிக்கிறார். இத்திரைப்படத்திற்கு ‘சம்பவம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குநர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன், ‘பக்ரீத்’ படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் பங்கு பெறுகின்றனர்.
இசை – அம்ரிஷ், ஒளிப்பதிவு – முத்து கே.குமரன், படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, வசனம் – நீலன் கே.சேகர், பாடல்கள் – அருண்பாரதி, முருகானந்தம், கலை இயக்கம் – ஏ.பழனிவேல், நடன இயக்கம் – தினேஷ், சண்டை இயக்கம் – விஜய் ஜாகுவார், தயாரிப்பு மேற்பார்வை – ஜி.சங்கர், நிர்வாகத் தயாரிப்பு – கேஆர்.ஜி.கண்ணன், இணை தயாரிப்பு – டாக்டர் ஆர்.முருகானந்த்.
இப்படத்தை இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக இருந்த ரஞ்சித் பாரிஜாதம் கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார்.
நேர்மையுடன், மனசாட்சிக்கு உட்பட்டு வாழும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நேர்மைக்குப் புறம்பாக தள்ளப்படும்போது ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி, சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் உள்ள பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது. இதில் நாயகர்கள் ஸ்ரீகாந்த், நடன இயக்குநர் தினேஷ், கதாநாயகிகள் பூர்ணா, சிருஷ்டி டாங்கே, தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
மேலும், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ஜாக்குவார் தங்கம், இயக்குநர்கள் பேரரசு, ஏ.வெங்கடேஷ், தரணி, திருமலை, நடிகர் நட்டி என்கிற நட்ராஜன், நாஞ்சில் சம்பத், தயாரிப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், கே.ராஜன் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார்கள்.



















