full screen background image

ஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..!

ஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..!

ஜப்பானில் நடைபெற்ற 28-வது ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்பட இயக்குநரான வசந்த் சாய் இயக்கிய ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற தமிழ்த் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது.

இத்திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து தேர்வான ஒரே திரைப்படம் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் பார்வதி திருவோத்து, லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

படத்தின் இயக்குநரான எஸ்.சாய் வசந்த் இந்த பெருமதிப்பு மிக்க விருதை, விழா இயக்குநர் ஹரிகி யாசுஹிரோ மற்றும் திரைப்பட விழா கமிட்டியின் தலைவர் குபோடா இசாவ்விடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

director vasanth-2

விருதை பெற்றுக் கொண்ட இயக்குனர் சாய் வசந்த் நெகிழ்ச்சியுடன் பேசுகையில், “இந்த பிரசித்தி பெற்ற ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ வென்றிருக்கும் விருது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் தந்திருக்கிறது.

ஆத்மார்த்தமாக விழா குழுவை பாராட்டும் இந்த வேளையில், எனது எழுத்தாளர்கள், கதையின் நாயகர்கள், மறைந்த திரு.அசோகமித்திரன், மறைந்த திரு.ஆதவன், புகழ்மிக்க திரு.ஜெயமோகன் ஆகியோரையும் பாராட்டி மகிழ்கிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், இப்படத்தின் முதுகெலும்பாக இருந்த அவர்களைப் பாராட்டுவதில் பெருமிகிழ்ச்சி கொள்கிறேன்…” என்றார்.

செப்டெம்பர் 15-ல் திரையிடப்பட்ட இப்படம், அனைவரின் வெகுவான கவனத்தையும் சிறப்பான பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது. மீண்டும் இத்திரைப்படம் செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் திரையிடப்பட இருக்கிறது.

Our Score