நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ்ச் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகைகளில் ஒருவராவார். எந்தவித பின்புலமும் இல்லாமல் தமிழ்ச் சினிமாவில் நுழைந்த இவர் இன்றைக்கு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்று சொல்லக் கூடிய அளவுக்கு நடிப்புத் திறன் கொண்டவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான கனா திரைப்படம் தற்போது இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5 தளத்தில் வெளியாகியுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் திரையுலக கேரியரில் அவருடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டிய சில திரைப்படங்களை இதில் பார்ப்போம்..!
காக்கா முட்டை
இப்படியொரு படத்தை இதற்கு முன் தமிழ்த் திரையுலகம் கண்டதில்லை. எம்.மணிகண்டன் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியிருந்த இத்திரைப்படம் குடிசை வாழ் மக்களின் யதார்த்த வாழ்க்கையை பிரதிபலித்தது.
கனா திரைப்படத்தை ZEE5 இல் பாருங்கள்
300 ரூபாய் மதிப்புள்ள பீட்சாவை எப்பாடுபட்டாவது சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் ஏழை சிறுவர்கள் இருவரின் வாழ்க்கைக் கதையை மிக, மிக யதார்த்தமாகச் சொல்லி நெகிழ வைத்திருந்தார்கள்.
இந்தப் படத்தில் இப்போதைய இளம் நடிகைகள் பல முறை யோசிக்கும் வேடத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து தமிழ்த் திரையுலகத்தைத் தன் பக்கமாக திரும்பிப் பார்க்க வைத்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
சேரிப் பெண் வேடம். மெல்லிய சேலை.. மேக்கப் இல்லாத முகம்.. ஆனால், அழுது ஊரைக் கூட்ட வேண்டியிருக்காத கேரக்டர் ஸ்கெட்ச். மகன்களின் நடிப்பைப் பார்த்து கொஞ்சுவதும், பையன்களின் சேட்டைகளைப் பார்த்து கோபப்படுவதிலும், ஒரு இள வயது தாயின் நிஜ நடிப்பை அப்படியே காட்டியிருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக பிலிம்பேர் விருதுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். அதே நேரத்தில் சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருதையும், நார்வே தமிழ் பிலிம் விருதையும் பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ். இத்திரைப்படமும் தேசிய, மாநில அரசுகளின் பல விருதுகளை வாரிச் சுருட்டியது.
குற்றமே தண்டனை
‘காக்கா முட்டை’ படத்தின் இயக்குநரான மணிகண்டன் இயக்கிய இரண்டாவது படம் இது. தன்னுடைய கண் ஆபரேஷனுக்கு தேவைப்படும் பணத்திற்காக தான் பார்த்த கொலையில் சிக்கியவர்களிடம் பேரம் பேசும் ஒரு வாலிபரைப் பற்றிய கதை இது.
இந்தப் படத்தில் சில காட்சிகளே ஆனாலும், படத்தின் மையத் தூணாக இருக்கும் அந்தக் கதாபாத்திரத்தில் பெயர் சொல்லும் அளவுக்கு நடித்திருந்தார் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யாவின் மரணம்தான் படத்தின் மையப் பகுதி. மொத்தக் கதையும் அதைச் சுற்றியே அமைந்திருக்கிறது. படத்தில் சில காட்சிகளே ஆனாலும் தனது சோக நடிப்பு, அமைதியான குணம்.. இரண்டையும் கலந்து கொடுத்து தனது இருப்பை நிலை நாட்டியிருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை போலவே இத்திரைப்படமும் விமர்சகர்களின் பெரும் பாராட்டைப் பெற்றது.
லஷ்மி
பிரபுதேவா, ஐஸ்வர்யா, தித்யா நடிப்பில் இயக்குநர் விஜய் இயக்கியிருந்த இத்திரைப்படம் நடனத்திற்காகவே பேசப்பட்டது.
தனது மகளின் நடனத் திறமையை வெளிப்படுத்த நினைத்தும், தனக்கு நேர்ந்த துயரத்தினால் மகளை நடனத்தின் பக்கமே போக விடாமல் தடுக்கும் ஒரு பரிதவிப்பான தாயின் கேரக்டரை இந்தப் படத்தில் செய்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அமைதியான அம்மா கேரக்டரில் நடித்திருந்த ஐஸ்வர்யாவுக்கு பெயரைப் பெற்றுக் கொடுத்தது இத்திரைப்படம். டைவர்ஸி என்பதையே சொல்லாமலேயே கடைசிவரையிலும் கொண்டு போகப்பட்டு மிக சுவாரஸ்யத்தைக் கொடுத்திருந்தது இத்திரைப்படம். சென்ற ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் நடனத்திற்கான பல விருதுகளை இத்திரைப்படம்தான் பெற்றது.
வடசென்னை
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய இரண்டு ஹிட்டுகளைக் கொடுத்த தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியின் மூன்றாவது படம் இது என்பதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தானே தயாரித்திருந்தார். படத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, பவன், டேனியல் இவர்களுடன் ஐஸ்வர்யாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆண் கதாபாத்திரங்களுக்கு இணையாக இந்த ‘வட சென்னை’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்றிருந்த கேரக்டரும் பேசப்பட்டது. ஒரு வடசென்னைப் பெண் எப்படி இருப்பாரோ அதை அப்படியே பிரதிபலிப்பதுபோல இருந்து ஐஸ்வர்யாவின் கேரக்டர்.
படத்தில் ஐஸ்வர்யா பேசியிருந்த சில ஆபாச வசனங்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தன. இருந்தாலும் தனுஷுக்கு ஏற்ற ஜோடி தான்தான் என்று சொல்லும் அளவுக்கு குப்பத்து பத்மாவாக நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருந்தார் ஐஸ்வர்யா.
கர்ச்சீப்பால் முகத்தை மறைத்துக் கொண்டு களேபரத்தில் தையல் மிஷினை ஆட்டையைப் போடும் காட்சியிலும், தொடர்ச்சியாய் தனுஷ் கொடுக்கும் உதட்டு முத்தத்தை வாங்கிக் கொண்டும், முத்தம் வெளியில் தெரிந்துவிட்ட அவமானத்தில் “உனக்கென்ன ஆம்பளை.. துடைச்சிட்டு போயிருவ.. எனக்குத்தான் அவமானம்…” என்று வெதும்புவதுமாக ஐஸ்வர்யாவின் தேர்ந்த நடிப்பைக் காட்டியது இத்திரைப்படம்.
கனா
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த முதல் திரைப்படம். அதுவரையிலும் பாடலாசிரியராகவும், நடிகராகவும் இருந்து வந்த அருண்ராஜா காமராஜ் சொன்ன கதை பிடித்துப் போய் உடனேயே படத்தைத் தயாரித்துவிட்டார் சிவகார்த்திகேயன்.
கெளசல்யா என்ற ஒரு கிராமத்துப் பெண்.. அரசுப் பள்ளியில் படித்து வரும் பெண்.. விளையாட்டில்.. அதுவும் ஆண்களே கோலோச்சிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு எப்படி ஜெயித்துக் காட்டுகிறாள் என்பதை நடித்துக் காட்டினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
படத்தில் ‘கெளசல்யா’ என்ற கேரக்டரை ஏற்றிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தனது முந்தைய படங்களில் இருந்தெல்லாம் முற்றிலும் மாறுபட்ட ஒரு கேரக்டரில்.. பள்ளி மாணவியாக.. கிரிக்கெட் வீராங்கனையாக.. கனவை நனவாக்கத் துடிக்கும் பெண்ணாக.. சிறப்பாக நடித்து பெரும் புகழைப் பெற்றிருக்கிறார். அவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய பாராட்டை அவருக்குப் பெற்றுக் கொடுத்த படம் இதுதான்.
இத்திரைப்படம் தற்போது இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5 தளத்தில் ரசிகர்களின் பார்வைக்கு வந்திருக்கிறது.
கனா திரைப்படத்தை ZEE5 இல் பாருங்கள்

















