கிரவுன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் எஸ்.எம்.இப்ராஹிம் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘சிதம்பரம் ரயில்வே கேட்’.
படத்தில் நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி நாயகனாகவும், ‘ஏகாந்தம்’ படத்தில் நடித்த நீரஜா, காயத்ரி, இருவரும் நாயகிகளாகவும் நடிக்கவுள்ளனர். மேலும் ‘கடலோரக் கவிதைகள்’ ரேகா, சூப்பர் சுப்பராயன், பால சரவணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இசை – கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு – ஆர்.வேலு, சண்டை இயக்கம் – சூப்பர் சுப்புராயன், பாடல்கள் – பிரியன், அருண் பாரதி, தயாரிப்பு மேற்பார்வை – சுசி காமராஜ், எழுத்து, இயக்கம் – சிவபாவலன்.
உயிருக்கு உயிரான இரண்டு நண்பர்கள், இவர்களுக்குள் ஏற்படும் பகை, காதல் ஆகியவற்றை மிக எதார்த்தமாக இந்த ‘சிதம்பரம் ரயில்வே கேட்’ திரைப்படம் பேசவிருக்கிறது.
1980-களில் தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையக் கருவாக வைத்து இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளார் இயக்குநர் சிவபாவலன்.
இதற்காக 1980-களில் சிதம்பரம் நகரம் இருந்ததைப் போன்ற செட் மோகன் ஸ்டூடியோவில் செட் பிரம்மாண்டமான செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பின் துவக்க விழா இன்று காலை சென்னை, போரூர் டி.ஆர். கார்டனில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தில் பங்கு பெறும் நட்சத்திரங்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
சென்னையில் இன்று தொடங்கிய படப்பிடிப்பு சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதிகளில் நடைபெறுகிறது.














