ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ.பி.கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘குருதி ஆட்டம்.’
‘8 தோட்டாக்கள்’ படத்தின் இயக்குநர் ஸ்ரீகணேஷ், இப்படத்தை இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்றவுடனேயே ‘குருதி ஆட்டம்’ தமிழ் சினிமாவில் பேசப்படும் படமாக மாறியிருக்கிறது.
சின்னத்திரையில் மிகவும் கொண்டாடப்பட்ட நடிகை பிரியா பவானி சங்கர். சினிமாவில் அறிமுகமான பிறகு நல்ல நடிகை என்ற பெயரை பெற்றார். அத்தோடு பல நல்ல பட வாய்ப்புகளும் அவரை தேடி வருகின்றன.
அதர்வா முரளி நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க, தற்போது பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இது பற்றி இயக்குநர் ஸ்ரீகணேஷ் பேசும்போது, “பொதுவாக, வளர்ந்து வரும் காலகட்டத்தில் நடிகைகள் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் எதையும் யோசிக்காமல் உடனே ஒப்புக் கொள்வார்கள். ஆனால் பிரியா அதில் விதிவிலக்கானவர்.
கதை சொல்ல நான் அவரை சந்தித்தபோது, அந்த கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தாலும், அவரது கதாபாத்திரத்துக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கலாம் என அவருடைய கருத்தை வெளிப்படையாக சொன்னார்.
உண்மையில், படத்தின் கதை மற்றும் கதாபாத்திரத்தின் மீது அவர் காட்டிய ஈடுபாடு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உடனடியாக நானும் அவரது கதாபாத்திரத்தை கொஞ்சம் மாற்றியமைத்தேன், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், படத்தில் நடிக்கவும் சம்மதித்தார்…” என்றார் இயக்குநர் ஸ்ரீகணேஷ்.
மதுரை பின்னணியில் அமைந்திருக்கும் இந்த கேங்க்ஸ்டர் படத்தில் பிரியா பவானி சங்கர் ஆசிரியராக நடிக்கிறார். ராதாராவி, ராதிகா சரத்குமார் போன்ற முக்கிய நடிகர்கள் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது.









