சிவசூர்யா மூவிஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சூளை பி.ஏழுமலை தயாரித்துள்ள திரைப்படம் ‘விசாகப்பட்டிணம் 1+3=1’.
இந்தப் படத்தில் ராகுல் என்னும் புதுமுகம் நாயகனாகவும், லிசா, செளம்யா என்னும் புதுமுகங்கள் ஹீரோயின்களாகவும் நடித்துள்ளனர்.
மேலும், லட்சுமிராஜ், கிங்காங், வெங்கல் ராவ் இவர்களுடன் ஷகிலாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – விஜய் ரமேஷ், இசை – ஆதீஷ், பாடல்கள் – ராஜேஷ் கண்ணா, டிசைன்ஸ் – ஷ்ரிதர், மக்கள் தொடர்பு – விஜய்முரளி.
வெற்றிகரமாக ஓடிய ‘ஜமீன் கோட்டை’, ‘குடும்பச் சங்கிலி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம் சந்தர் இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் ராம் சந்தர் பேசுகையில், “வெள்ள நிவாரண நிதி வழங்க வந்த நான்கு பேர் மர்மமான முறையில் திடீரென்று இறக்கின்றனர். கொலையாளிகளைக் கண்டறிய போலீஸார் தனிப்படை அமைத்து தேடுகின்றனர்.
இவர்களைக் கொலை செய்தவர்கள் யார்.. நிவாரணம் அனுப்பியவர்கள் செய்த சதியா.. அல்லது நான்கு பேருக்கும் தனித்தனி பகையா.. என்றெல்லாம் பல கோணங்களில் காவல்துறை புலனாய்வு செய்கிறது.
விசாரணையின் முடிவில் காவல்துறையே அதிர்ச்சியடையும் வண்ணம் ஒரு உண்மை புலனாகிறது. அது என்ன என்பதை பரபரப்பான கதையில், விறுவிறுப்பான திரைக்கதையில் படமாக்கியிருக்கிறோம். படம் விரைவில் வெளியாகும்..” என்றார்.









