‘வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன் மற்றும் ‘பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்’ – ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் ‘8 தோட்டாக்கள்’.
இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீகணேஷ் இயக்கியிருக்கும் இந்த ‘8 தோட்டாக்கள்’ படத்தில் வெற்றி என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார்.
பிரம்மாண்டமான விளம்பர யுக்திகளால், ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்து இருக்கும் ‘8 தோட்டாக்கள்’ படத்தை, வருகின்ற ஏப்ரல் 7-ம் தேதி ‘சக்திவேல் பிலிம் பேக்டரி’ சார்பில் வெளியிடுகிறார் சக்திவேல்.
இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் நடிகை அபர்ணா பாலமுரளி சென்ற ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற மலையாள படமான ‘மஹேஷிந்தெ பிரதிகாரம்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர். தமிழில் இந்தப் படத்தில்தான் இவர் அறிமுகமாகிறார்.
இது பற்றி பேசிய நடிகை அபர்ணா பாலமுரளி, “முழுக்க முழுக்க இளமையான திறமையாளர்களை கொண்டு உருவான இந்த ‘8 தோட்டாக்கள்’ திரைப்படம் மூலம் நான் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைப்பது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது.
‘மீரா வாசுதேவன்’ என்கின்ற ஒரு பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் நான் இந்த ‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்து இருக்கின்றேன். எப்போதும் சாந்தமாக இருக்கும் இந்த படத்தின் கதாநாயகனுக்கு இருக்கும் ஒரே நட்புறவு நான்தான். ஆனால் ஒருபுறம் நட்புறவோடு இருந்தாலும், மறுபுறம் வேறொரு திசையை நோக்கி என்னுடைய கதாபாத்திரம் பயணிக்கும்.
‘8 தோட்டாக்கள்’ படத்திற்காக கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்து இருக்கும் ‘மன்னிப்பாயா’ பாடலையும் நான் பாடியிருக்கிறேன். ரசிகர்கள் மத்தியில் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருவது, எனக்கு மேலும் மகிழ்ச்சியாக இருக்கின்றது…” என்று உற்சாகமாக கூறினார்.