ஒவ்வொரு ஆண்டும் சிறந்த புதுமுக இயக்குநருக்கு மறைந்த இயக்குநர் கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் பெயரில் கவுரவ விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான சிறந்த புதுமுக இயக்குநர் விருது, ‘லென்ஸ்’ படத்தின் இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது.
இம்மாதம் 12-ம் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறவிருக்கும் இந்த விருது விழாவில், இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இவ்விருதினை பெறவிருக்கிறார்.
இயக்குநர் கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் தனது முதல் படமான ‘பிரேம புஸ்தகம்’ படத்தினை இயக்கிக் கொண்டிருக்கையில் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தார். இப்படத்தில்தான் அஜீத் அறிமுக நாயகனாக நடித்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் திடீர் மறைவையடுத்து ‘கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் மேமோரியல் ஃபௌண்டேஷன்’ எனும் தொண்டு நிறுவனம் துவங்கப்பட்டு கடந்த 18 ஆண்டுகளாக இந்திய அளவில் சிறந்த படம் இயக்கிய முதல் பட இயக்குநர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருதளித்து கவுரவித்து வருகிறது.
இந்தாண்டுக்கான விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் கலந்து கொள்கிறார். கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் நினைவு விரிவுரையாக “The Making of an Actor” எனும் தலைப்பில் பாலிவுட் நடிகர் ஸ்ரீபோமன் இரானி பேசுகிறார். கவுரவ விருந்தினர்களாக இயக்குநர்கள் ப்ரியதர்ஷன், சுதிர் மிஸ்ரா, டாக்டர் ஜெயசுதா கபூர் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியை மெருகேற்றும்விதமாக நடிகர் / இயக்குநர் என பன்முகம் கொண்ட நடிகை சுகாசினி மணிரத்னம், தனது தந்தையான சாருஹாசன் எழுதிய “Thinking on my feet” என்கிற சுயசரிதை புத்தகத்தை அடிப்படையாக கொண்டு ஒரு மேடை நாடகத்தினை இயக்குகிறார்.
இதில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் அவரது மகளான மதுவந்தி அருண் இணைந்து நடிக்கின்றனர். இதுவரை பல தமிழ் மேடை நாடகங்களில் நடித்துள்ள ஒய்.ஜி.மகேந்திரன் முதன்முறையாக ஆங்கில மேடை நாடகத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் நடிகர்கள் பிரசன்னா மற்றும் சுப்பாராவ் ஆகியோரும் நடிக்கின்றனர்.